கரூர் மாவட்டத்தில் பிளஸ்-2 பொதுத்தேர்வில் 94.31 சதவீதம் பேர் தேர்ச்சி


கரூர் மாவட்டத்தில் பிளஸ்-2 பொதுத்தேர்வில் 94.31 சதவீதம் பேர் தேர்ச்சி
x

கரூர் மாவட்டத்தில் பிளஸ்-2 பொதுத்தேர்வில் 94.31 சதவீதம் பேர் தேர்ச்சி அடைந்தனர்.

கரூர்

பொதுத்தேர்வு முடிவு

தமிழகத்தில் பிளஸ்-2 பொதுத்தேர்வு கடந்த மார்ச் மாதம் 13-ந்தேதி தொடங்கி ஏப்ரல் மாதம் 3-ந்தேதியுடன் முடிவடைந்தது. தொடர்ந்து விடைத்தாள்கள் திருத்தும் பணிகள் நடந்து முடிந்தது. இதனையடுத்து 12-ம் வகுப்பிற்கான தேர்வு முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டது. பள்ளி மாணவர்களுக்கு படித்த பள்ளிகளில் சமர்ப்பித்த உறுதிமொழி படிவத்தில் குறிப்பிட்டுள்ள செல்போன் எண்ணுக்கு தேர்வு முடிவுகள் அனுப்பப்பட்டன. மேலும் தேர்வு முடிவுகளை மாணவர்கள் அரசு அறிவித்த இணையதளங்கள் மூலமாகவும் தெரிந்து கொண்டனர்.

மேலும் சில மாணவ, மாணவிகள் தங்கள் படித்த பள்ளிகளுக்கு நேரில் வந்து நண்பர்களுடன் சேர்ந்து செல்போன் மூலம் தெரிந்து கொண்டனர். அப்போது தாங்கள் தேர்ச்சி பெற்றதை அறிந்து மாணவர்கள் தங்களது நண்பர்களுடன் சேர்ந்து சந்தோசத்தில் துள்ளிகுதித்து மகிழ்ந்தனர். கரூர் மாவட்டத்தில் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் 104 பள்ளிகளை சேர்ந்த 4,768 மாணவர்களும், 5,436 மாணவிகளும் என மொத்தம் 10,204 மாணவ, மாணவிகள் தேர்வில் கலந்து கொண்டனர். நேற்று வெளியான பிளஸ்-2 பொதுத்தேர்வு முடிவுகளின்படி 4,385 மாணவர்களும், 5,238 மாணவிகள் என மொத்தம் 9,623 பேர் தேர்ச்சி பெற்றனர்.

94.31 சதவீதம் தேர்ச்சி

கரூர் மாவட்டத்தில் 94.31 சதவீத மாணவ-மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில் மாணவர்கள் 91.97 சதவீத தேர்ச்சியும், மாணவிகள் 96.36 சதவீத தேர்ச்சியும் பெற்றுள்ளனர். கரூர் மாவட்டத்தில் அரசு பள்ளிகளில் 90.32 சதவீத தேர்ச்சியும், அரசு உதவி பெறும் பள்ளிகளில் 98.27 சதவீத தேர்ச்சியும், தனியார் பள்ளிகளில் 99.5 சதவீத தேர்ச்சியும் பெற்றுள்ளனர்.

மாவட்டத்தில் 88 மாற்றுத்திறனாளிகள் தேர்வில் கலந்து கொண்டனர். இதில் 70 பேர் தேர்ச்சி பெற்றனர். இது 79.54 சதவீத தேர்ச்சி ஆகும்.

மாநில அளவில் 17-வது இடம்

தேர்ச்சி விகிதத்தில் மாநில அளவில் கரூர் மாவட்டம் 17-வது இடம் பெற்றுள்ளது. கரூர் மாவட்டத்தில் 104 பள்ளிகளில் 33 பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி அடைந்துள்ளன.

இதில் 4 அரசு பள்ளிகளும், 3 அரசு உதவி பெறும் பள்ளிகளும், 26 தனியார் பள்ளிகளும் என மொத்தம் 33 பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி அடைந்துள்ளன.


Next Story