கல்லூரி மாணவரை அடித்துக்கொன்று உடலை தண்டவாளத்தில் வீசிய பயங்கரம்


கல்லூரி மாணவரை அடித்துக்கொன்று   உடலை தண்டவாளத்தில் வீசிய பயங்கரம்
x

ராமநாதபுரத்தில் பகுதி நேர வேலைக்கு சென்ற இடத்தில் கல்லூரி மாணவர் அடித்துக்கொல்லப்பட்டார். அவரது உடல் தண்டவாளத்தில் வீசப்பட்டது. இதுதொடர்பாக நண்பர்கள் உள்ளிட்ட சிலரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

ராமநாதபுரம்

ராமநாதபுரத்தில் பகுதி நேர வேலைக்கு சென்ற இடத்தில் கல்லூரி மாணவர் அடித்துக்கொல்லப்பட்டார். அவரது உடல் தண்டவாளத்தில் வீசப்பட்டது. இதுதொடர்பாக நண்பர்கள் உள்ளிட்ட சிலரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

கல்லூரி மாணவர்

ராமநாதபுரம் அருகே உள்ள கூரியூரை சேர்ந்தவர் உஸ்மான்அலி. இவருடைய மகன் செய்யதுகான் (வயது 21).

இவர் ராமநாதபுரம் அருகே தனியார் கல்லூரி ஒன்றில் 3-ம் ஆண்டு படித்து வந்தார். இவரின் தந்தை விபத்தில் காயமடைந்து வீட்டில் இருந்து வருகிறார்.

குடும்ப சூழ்நிலை காரணமாக மாணவர் செய்யதுகான், ஒரு பெட்ரோல் பங்கில் பகுதி நேரமாக இரவில் வேலை பார்த்து வந்துள்ளார்.

அடித்துக்கொலை

இந்த நிலையில் நேற்று காலை செய்யதுகான் பெட்ரோல் பங்க் எதிரில் உள்ள ரெயில் தண்டவாளத்தில் தலை உள்ளிட்ட இடங்களில் படுகாயங்களுடன் இறந்து கிடந்தார். இதுபற்றி தகவல் அறிந்த ராமநாதபுரம் போலீசார் அங்கு விரைந்து சென்று அவரது உடலை கைப்பற்றி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

ரெயிலில் அடிபட்டு அவர் இறந்திருக்கலாம் என்று கருதிய நிலையில் போலீசாரின் விசாரணையில் அவர் அடித்து கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற அதிர்ச்சி தகவல் வெளியானது.

வாலிபர் செய்யதுகான் வேலை பார்த்த இடத்தில் கம்பு மற்றும் தரையில் ரத்த கறைகள் இருந்தன. இதுதவிர அந்த இடத்தில் சாப்பாடு, உணவு பொருட்கள் உள்ளிட்டவை சிதறி கிடந்ததால் கைகலப்பு நடந்திருக்கலாம் என்பது உறுதியானது. பெட்ரோல் நிலைய பகுதியில் சம்பவம் நடந்திருக்கலாம் என்று தெரியவந்ததால் வழக்கமாக அவரை சந்திக்க வரும் நண்பர்கள் சிலரை சந்தேகத்தின் பேரில் போலீசார் பிடித்து விசாரித்து வருகின்றனர்.

கண்காணிப்பு கேமரா காட்சி

பெட்ரோல் பங்கில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளின் அடிப்படையில் போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர்.

மேலும் விசாரணையில், மாணவர் செய்யதுகான் பெட்ரோல் பங்கில் வேலை பார்ப்பதால் இரவில் அவரை கூரியூர், பெரியார்நகர் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த நண்பர்கள் சந்திக்க வருவார்கள் என்றும், இரவில் நீண்ட நேரம் பேசிக்கொண்டிருப்பார்கள் என்றும் கூறப்படுகிறது.

இவ்வாறு நேற்று முன்தினம் வந்தபோது அவர்களுக்குள் தகராறு நடந்திருக்கலாம் என்றும், அந்த தகராறில் ஆத்திரம் அடைந்தவர்கள் செய்யதுகானை தாக்கி கொலை செய்திருக்கலாம் என்றும், அதன்பின்னர் கொலையை, தற்கொலையாக சித்தரிக்கும் வகையில் உடலை தண்டவாள பகுதியில் போட்டு விட்டு தப்பி சென்றிருக்கலாம் என்றும் போலீசாரின் விசாரணையில் தகவல் வெளியாகி உள்ளது.

2 ரெயில்கள் சென்றன

தண்டவாளத்தின் நடுப்பகுதியில் உடலை போட்டதால், அதன்பின்னர் 2 ரெயில்கள் சென்றபோதும் அவரது உடல் பெரிய அளவில் பாதிக்கவில்லை. இதனால் அவர் கொலை செய்யப்பட்டது உறுதிபடுத்தப்பட்டு இருப்பதாக போலீசார் கூறினர்.

நண்பர்களுக்குள் ஏற்பட்ட மோதலை தடுக்க சென்றபோது இந்த கொலை நடந்திருக்கலாம் என்ற கோணத்திலும் சந்தேகத்தின் அடிப்படையில் 5 பேரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ராமநாதபுரத்தில் நள்ளிரவில் கல்லூரி மாணவர் கொலை செய்யப்பட்டு, உடலை தண்டவாளத்தில் போட்டுவிட்டு சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுதொடர்பாக ராமநாதபுரம் நகர் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


Related Tags :
Next Story