கடலூர் அருகே பயங்கரம் கழுத்தை அறுத்து வாலிபர் படுகொலை கள்ளக்காதலியுடன் உல்லாசமாக இருக்க அனுமதி கேட்டதால் நண்பர் வெறிச்செயல்


கடலூர் அருகே பயங்கரம் கழுத்தை அறுத்து வாலிபர் படுகொலை கள்ளக்காதலியுடன் உல்லாசமாக இருக்க அனுமதி கேட்டதால் நண்பர் வெறிச்செயல்
x

கடலூர் அருகே தனது கள்ளக்காதலியுடன் உல்லாசமாக இருக்க அனுமதி கேட்ட வாலிபரை அவரது நண்பரே கழுத்தை அறுத்து படுகொலை செய்துள்ளார்.

கடலூர்

கடலூர் முதுநகர்,

கடலூர் முதுநகர் அருகே உள்ள ஈச்சங்காடு மேட்டு தெருவை சேர்ந்தவர் பழனி. இவரது மகன் எலி என்கிற கிருஷ்ணமூர்த்தி (வயது 28). திருமணம் ஆகாதவர்.

இவர் கடலூர் சிப்காட்டில் உள்ள ஒரு தனியார் ரசாயன தொழிற்சாலையில் ஒப்பந்த தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார்.

நேற்று முன்தினம் இவரது தாய் காரைக்காட்டில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்றுவிட்டார். இதனால் கிருஷ்ணமூர்த்தி மட்டும் வீட்டில் தனியாக இருந்தார். நேற்று காலை கிருஷ்ணமூர்த்தி அவரது வீட்டுக்கு வெளியே கழுத்து அறுக்கப்பட்டு பிணமாக கிடந்தார். இதை அந்த பகுதியை சேர்ந்தவர்கள் பார்த்து அதிர்ச்சியடைந்தனர்.

போலீசார் விசாரணை

இதுகுறித்து கடலூர் முதுநகர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் துணை போலீஸ் சூப்பிரண்டு கரிகால் பாரிசங்கர் மற்றும் முதுநகர் போலீசார் விரைந்து சென்று சம்பவ இடத்தை பார்வையிட்டனர். பின்னர், கிருஷ்ணமூர்த்தியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதனிடையே தடயவியல், கைரேகை நிபுணர்கள் நேரில் வந்து தடயங்களை சேகரித்தனர். மேலும் போலீஸ் மோப்பநாய் கூப்பரும் வரவழைக்கப்பட்டது. கொலை நடந்த இடத்தில் மோப்பமிட்ட கூப்பர், அங்கிருந்து சிறிது தூரம் வரை ஓடிச் சென்று நின்றது. யாரையும் கவ்விப்பிடிக்கவில்லை.

நண்பரிடம் விசாரணை

கடந்த 2020-ம் ஆண்டு நடந்த ஒரு கொலை வழக்கில் கிருஷ்ணமூர்த்திக்கு தொடர்பு உள்ளது. அந்த கொலைக்கு பழிக்குப்பழியாக கிருஷ்ணமூர்த்தி கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என்று சந்தேகித்து கடலூர் முதுநகர் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) குருமூர்த்தி தலலைமையிலான போலீசார் விசாரணையை முன்னெடுத்தனர்.

அதன்படி, கடந்த 2020-ம் ஆண்டு நடந்த ஒரு கொலை வழக்கில் தொடர்புடையவராக இருந்த கிருஷ்ணமூர்த்திக்கும், கடலூர் முதுநகர் அருகே உள்ள ஈச்சங்காடு பகுதியை சேர்ந்த ராஜா மகன் குமரேசன் (28) என்பவருக்கும் இடையே அறிமுகம் ஏற்பட்டு, அன்று முதல் இருவரும் நண்பர்களாக இருந்து வந்தது தெரியவந்தது. இதனால் குமரேசன் மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது.

அதன்பேரில், குமரேசனை போலீசார் பிடித்து விசாரித்தனர். அதில், கிருஷ்ணமூர்த்தியை தான் கத்தியால் கழுத்தை அறுத்து கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். இதையடுத்து, குமரேசனை போலீசார் கைது செய்து, கொலைக்கான காரணம் குறித்து விசாரித்தனர். அப்போது அவர் போலீசில் அளித்த வாக்குமூலம் விவரம் வருமாறு:-

கள்ளக்காதல்

நானும் கிருஷ்ணமூர்த்தியும், நண்பர்களாக பழகி வந்தோம். இருவரும் சேர்ந்து பல தொழிற்சாலைகளில் இரும்பு பொருட்களை திருடி வந்தோம். எனக்கு திருமணமாகி ஒரு குழந்தை உள்ளது.

அதேபோன்று, பண்ருட்டியில் இருக்கும் எனது உறவினர் முறையில் திருமணமான ஒரு பெண்ணுடன் எனக்கு கள்ளத்தொடர்பு இருந்து வந்தது. நாங்கள் அவ்வப்போது தனிமையில் சந்தித்து சந்தோசமாக இருந்தோம். இதுபற்றி கிருஷ்ணமூர்த்திக்கும் தெரியும். இதனால், தனக்கும் அந்த பெண்ணுடன் இருக்க ஆசையாக உள்ளது, அதற்கு அனுமதிக்க வேண்டும் என்று என்னிடம் பலமுறை கேட்டுவந்தார். ஆனால் நான் அனுமதிக்கவில்லை. மேலும், தன்னை அந்த பெண்ணுடன் சேர்ந்து இருக்க அனுமதிக்கவில்லையென்றால், எனது மனைவியிடமும், அந்த பெண்ணின் கணவரிடமும் சொல்லிவிடுவதாகவும் மிரட்டினார்.

கழுத்தை அறுத்து கொன்றேன்

இந்த நிலையில், நேற்று முன்தினம் இரவு கிருஷ்ணமூர்த்தியின் வீட்டில் வைத்து நாங்கள் மதுகுடித்தோம். அப்போது, அந்த பெண்ணுடன் தன்னை உல்லாசமாக இருக்க அனுமதிக்க வேண்டும் இல்லை என்றால் கொலை செய்துவிடுவேன் என்று கத்தியை காட்டி கிருஷ்ணமூர்த்தி என்னை மிரட்டினார். சிறிது நேரத்தில் அவருக்கு மதுபோதை தலைக்கேறிய பின், சமயம் பார்த்து அவர் வைத்திருந்த கத்தியை பிடுங்கி கிருஷ்ணமூர்த்தியின் கழுத்தை அறுத்து கொலை செய்துவிட்டு பின்னர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டேன். இதன் பின்னர் சுத்துகுளம் பகுதியில் பதுங்கி இருந்தபோது போலீசார் என்னை மடக்கி பிடித்துவிட்டனர். இவ்வாறு அவர் வாக்குமூலத்தில் கூறியிருந்தார். தொடர்ந்து அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story