வங்கக்கடலில் உருவானது குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி: 10ஆம் தேதி புயலாக வலுப்பெறக்கூடும் - வானிலை ஆய்வு மையம்


வங்கக்கடலில் உருவானது குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி: 10ஆம் தேதி புயலாக வலுப்பெறக்கூடும் -  வானிலை ஆய்வு மையம்
x

தென்கிழக்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு அந்தமான் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது.

சென்னை,

தமிழ்நாட்டில் கோடை காலம் தொடங்கிய நிலையில், இடையிடையே பரவலாக மழையும் பெய்தது. இதனால் வெப்பத்தின் தாக்கம் சற்று குறைந்து இருக்கிறது.

வாட்டி வதைக்கும் கத்தரி வெயில் காலம் தொடங்கினாலும் கடந்த 2 நாட்களாக வெயிலின் அளவு குறைவாகவே இருந்து வருகிறது. நேற்று அதிகபட்சமாக ஈரோடு, திருத்தணியில் 96.44 டிகிரி தான் வெயில் பதிவாகி இருந்தது.

இந்தநிலையில், தென்கிழக்கு வங்க்கடல் மற்றும் தெற்கு அந்தமான் பகுதியில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நாளை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடையும். அதன்பின்னர் புயலாக மாறி வங்கதேசம், மியன்மாரை நோக்கி நகரும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

மத்திய கிழக்கு வங்கக்கடல் மற்றும் அந்தமான் கடல் பகுதியில் மே 10-ம் தேதி புயல் உருவாக வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. இந்த புயலுக்கு 'மோகா' என்று பெயரிடப்பட்டு இருக்கிறது. இந்த பெயரை ஏமன் நாடு வழங்கியுள்ளது. வங்க கடல் பகுதியில் புயல் உருவானாலும், இதனால் தமிழ்நாட்டுக்கு பெரிய அளவில் மழைக்கான வாய்ப்பு இல்லை என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.


Next Story