வங்க கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது; வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு


வங்க கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது; வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு
x

வங்க கடலில் வருகிற 7 அல்லது 8-ந் தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் வாய்ப்பு உள்ளது என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

சென்னை,

தமிழ்நாட்டில் கடந்த மாதத்தின் தொடக்கத்தில் இருந்து கோடை வெயில் சுட்டெரித்தது. பல இடங்களில் வெயில் 100 டிகிரியை தாண்டி பதிவானதைப் பார்க்க முடிந்தது. அதிலும் கரூர், ஈரோடு மாவட்டங்களில் அதிகபட்ச வெப்பம் பதிவானது.

இந்த நிலையில் தமிழ்நாட்டில் வளிமண்டலத்தின் கீழடுக்கில் மேற்கு திசை காற்றும் கிழக்கு திசை காற்றும் சந்திக்கும் பகுதி தொடர்ந்து நிலவுவதாலும், காற்றில் ஈரப்பதத்தின் அளவு கூடியிருப்பதாலும், நிலப்பகுதிகளில் ஈரப்பதத்தின் குவிவும் அதிகரித்திருப்பதாலும் தமிழ்நாட்டில் பெரும்பாலான இடங்களில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து கொண்டு இருக்கிறது.

கனமழை பெய்யும்

இதன் தொடர்ச்சியாக இன்று (புதன்கிழமை) தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

மேலும் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள மாவட்டங்களான நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், திருப்பூர், தென்காசி, விருதுநகர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், சேலம், நாமக்கல், கரூர், ஈரோடு, திருச்சி, அரியலூர், வேலூர், திருப்பத்தூர் உள்பட உள்மாவட்டங்கள், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை ஆகிய டெல்டா மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்காலில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யக்கூடும் என்றும் கூறி உள்ளது.

காற்றழுத்த தாழ்வு பகுதி

இதன் தொடர்ச்சியாக நாளை (வியாழக்கிழமை) முதல் 6-ந் தேதி (சனிக்கிழமை) வரை 3 நாட்களுக்கு தமிழ்நாட்டில் சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது; பின்னர், 6-ந் தேதி தென் கிழக்கு வங்க கடல் பகுதியில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி உருவாகி, வருகிற 7-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) அல்லது 8-ந் தேதி (திங்கட்கிழமை) குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெறக்கூடும்.

இது அடுத்து தீவிர தாழ்வு பகுதியாகவும், தாழ்வு மண்டலமாகவும் வலுப்பெறுமா? என்பது குறித்த அடுத்தகட்ட நகர்வு பற்றி ஓரிரு நாளில் தெரிவிக்கப்படும் என்றும் வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன் நேற்று தெரிவித்தார்.

மீனவர்களுக்கு எச்சரிக்கை

தென் மேற்கு வங்க கடல், அதனையொட்டியுள்ள மத்திய மேற்கு வங்க கடல், தமிழக கடற்கரை பகுதிகள், மன்னார் வளைகுடா, குமரி கடல், லட்சத்தீவு மற்றும் மாலத்தீவு பகுதிகளில் சூறைக்காற்று 40 கி.மீ. முதல் 55 கி.மீ. வரையிலான வேகத்தில் வீசக்கூடும் என்பதால் அந்த பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

60 இடங்களில் கனமழை

தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. அந்த வகையில் நேற்று முன்தினமும் நல்ல மழை பெய்தது. அதாவது நேற்று முன்தினம் காலை 8.30 மணி முதல் நேற்று காலை 8.30 மணி வரையிலான 24 மணி நேர நிலவரப்படி, தமிழ்நாட்டில் பெரும்பாலான இடங்களில் லேசானது முதல் மிக கன மழை வரை பதிவாகியுள்ளது. அதிகபட்சமாக கடலூர் மாவட்டம் வானமாதேவியில் 19 செ.மீ., அதற்கடுத்தபடியாக சேலம் மாவட்டம் சங்கரிதுர்கம் பகுதியில் 17 செ.மீ. உள்பட 13 இடங்களில் மிக கன மழை பதிவாகியுள்ளது. இந்த 13 இடங்களில் 12 செ.மீ. முதல் 20 செ.மீ. வரையில் மழை பெய்து இருக்கிறது.

அதேபோல், தஞ்சாவூர், விருதுநகர், நாமக்கல், திருச்சி, சேலம், கோவை, செங்கல்பட்டு உள்பட பெரும்பாலான மாவட்டங்களில் உள்ள 60 இடங்களில் கனமழை பெய்திருக்கிறது. இந்த பகுதிகளில் 7 செ.மீ. முதல் 11 செ.மீ. வரை மழை பதிவாகியுள்ளது.


Next Story