தலைமை ஆசிரியை மீது ஒரு வாரத்தில் நடவடிக்கை


தலைமை ஆசிரியை மீது ஒரு வாரத்தில் நடவடிக்கை
x

மாணவர்களை வைத்து பள்ளிக்கூட கழிவறையை சுத்தம் செய்ய வைத்த தலைமை ஆசிரியை மீது ஒருவாரத்தில் துறை ரீதியான நடவடிக்கை எடுக்கும்படி மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

மதுரை

மாணவர்களை வைத்து பள்ளிக்கூட கழிவறையை சுத்தம் செய்ய வைத்த தலைமை ஆசிரியை மீது ஒருவாரத்தில் துறை ரீதியான நடவடிக்கை எடுக்கும்படி மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

மாணவர்களுக்கு மிரட்டல்

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் கணவாய்பட்டியைச் சேர்ந்த ரேணுகாதேவி, மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-

கணவாய்பட்டி கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய அரசு தொடக்கப்பள்ளி உள்ளது. இங்கு பணியாற்றும் தலைமை ஆசிரியை, இந்த பள்ளி மாணவர்களை அங்குள்ள கழிப்பறையை சுத்தம் செய்யும்படி கட்டாயப்படுத்தி உள்ளார். இந்த விஷயத்தை பெற்றோர் உள்ளிட்ட வேறு யாரிடமும் தெரிவிக்கக்கூடாது என்றும் மிரட்டியுள்ளார்.

கழிவறையை சுத்தம் செய்தபின்பு, அந்த மாணவர்கள் ஒவ்வொருவருக்கும் 10 ரூபாயை கொடுத்து வந்துள்ளார். இதுபோல பலமுறை மாணவர்களை மிரட்டி சுத்தப்படுத்தும் பணிகளில் ஈடுபடுத்தியுள்ளார். மேலும் பெற்றோர்-ஆசிரியர் கூட்டத்திற்கு வராத பெற்றோர்களின் பிள்ளைகளை இரும்பு ஸ்கேலால் தாக்கியுள்ளார்.

கேள்விக்குறியான எதிர்காலம்

கிராமத்தில் விளையும் காய்கறிகளை இலவசமாக தனக்கு கொண்டு வந்து தர வேண்டும் எனவும் மாணவர்களை கட்டாயப்படுத்தி உள்ளார். பள்ளிக்கு அவர் உரிய நேரத்திற்கு வருவதில்லை. இதற்காக பிளஸ்-2 முடித்த பெண் ஒருவரை ரூ.3 ஆயிரம் சம்பளத்தில் நியமித்து, தான் இல்லாத நேரத்தில் அவரை வகுப்பு நடத்தும்படி செய்கிறார்.

இதனால் இந்த பள்ளியில் படிக்கும் மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகிறது. எனவே நத்தம் தாலுகா கணவாய்பட்டி பள்ளி தலைமை ஆசிரியை மீதும், அவரை கண்டிக்காத பள்ளி கல்வித்துறை அதிகாரிகள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் கூறியிருந்தார்.

துறை ரீதியான நடவடிக்கை

இந்த வழக்கு நீதிபதிகள் மகாதேவன், சத்தியநாராயணபிரசாத் ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது மனுதாரர் வக்கீல் ஆஜராகி, மாணவர்கள் கழிவறைகளை சுத்தப்படுத்த கட்டாயப்படுத்திய விவகாரம் குறித்து புகார் தெரிவித்ததால் 3 மாணவர்களை பள்ளியில் இருந்து நீக்கி உள்ளார் என்று தெரிவித்தார். இதை கேட்ட நீதிபதிகள், தலைமை ஆசிரியையின் நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்தனர்.

மேலும், தலைமை ஆசிரியை மீதான புகார் குறித்து கல்வித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி துறை ரீதியான நடவடிக்கையை ஒரு வார காலத்திற்குள் எடுக்க வேண்டும். தவறும்பட்சத்தில் திண்டுக்கல் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் நேரில் ஆஜராக உத்தரவிடுவோம் என்று நீதிபதிகள் எச்சரித்தனர். பின்னர் இந்த வழக்கின் விசாரணையை ஒத்திவைத்தனர்.


Next Story