முகத்தில் மிளகாய் பொடியை தூவி கணவரை வெட்டிக்கொன்ற பெண்


முகத்தில் மிளகாய் பொடியை தூவி கணவரை வெட்டிக்கொன்ற பெண்
x

தினமும் குடித்துவிட்டு தகராறு செய்ததால் முகத்தில் மிளகாய் பொடியை தூவி தொழிலாளி சரமாரியாக வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இந்த வெறிச்செயலில் ஈடுபட்ட அவரது மனைவியை போலீசார் கைது செய்தனர்.

தேனி,

தேனி மாவட்டம் பாலக்கோம்பை, ராயவேலூர் பகுதியை சேர்ந்தவர் சண்முகவேல் (வயது 37). இவரது மனைவி அழகுசின்னு (31). இவர்கள் இருவரும் கூலி வேலை செய்து வந்தனர். இந்த தம்பதிக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.

இந்தநிலையில், சண்முகவேல் தினமும் குடித்துவிட்டு வந்து மனைவி அழகுசின்னுவிடம் தகராறு செய்து அவரை துன்புறுத்தியதாக கூறப்படுகிறது. நேற்று முன்தினம் இரவும் சண்முகவேல் மனைவியிடம் தகராறு செய்தார்.

வெட்டிக்கொலை

இதனால் ஆத்திரமடைந்த அழகுசின்னு வீட்டில் இருந்த மிளகாய் பொடியை எடுத்து சண்முகவேல் முகத்தில் தூவினார். அப்போது எரிச்சல் தாங்க முடியாமல் அவர் வலியால் அலறி துடித்தார். ஆனாலும் ஆத்திரம் அடங்காத அவர் அரிவாளை எடுத்து சண்முகவேலின் இடது கை, கால் மற்றும் பின் தலையில் சரமாரியாக வெட்டினார்.

இதில் ரத்த வௌ்ளத்தில் கீழே சரிந்த சண்முகவேல் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த ராஜதானி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சண்முகவேல் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மனைவி கைது

இதையடுத்து போலீசார் அழகுசின்னுவை கைது செய்து விசாரணை நடத்தினர். அப்போது அவர் போலீசில் வாக்குமூலம் அளித்தார். அதில், நானும், எனது கணவரும் கருத்து வேறுபாடு காரணமாக 4 ஆண்டுகளாக பிரிந்து வாழ்ந்து வந்தோம். கடந்த 2 மாதங்களுக்கு முன் உறவினர்கள் பேச்சுவார்த்தை நடத்தி எங்களை சேர்த்து வைத்தனர். ஆனால் அதன்பிறகு எனது கணவர் தினமும் மதுகுடித்துவிட்டு போதையில் என்னிடம் தகராறு செய்து வந்தார்.

இதன் காரணமாக எனக்கு அவருடன் வாழ பிடிக்கவில்லை. இதனால் அவரை தீர்த்துகட்ட முடிவு செய்தேன். இந்நிலையில் நேற்று முன்தினம் வழக்கம்போல் குடித்துவிட்டு வந்து என்னிடம் தகராறு செய்தார். அப்போது நான் அவர் மீது மிளகாய் பொடியை தூவி அரிவாளால் வெட்டிக்கொலை செய்தேன் என்று வாக்குமூலத்தில் கூறியிருந்ததாக போலீசார் தெரிவித்தனர். மதுபோதையில் தகராறு செய்த கணவனை, மனைவியே அரிவாளால் வெட்டிக்கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story