லாரிகள்-கார், அரசு பஸ் மோதி விபத்து


லாரிகள்-கார், அரசு பஸ் மோதி விபத்து
x

தொப்பூர் கணவாயில் லாரிகள்-கார், அரசு பஸ் அடுத்தடுத்து மோதி விபத்துக்குள்ளானதால் விடிய, விடிய போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தர்மபுரி

நல்லம்பள்ளி:

தொப்பூர் கணவாயில் லாரிகள்-கார், அரசு பஸ் அடுத்தடுத்து மோதி விபத்துக்குள்ளானதால் விடிய, விடிய போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

அடுத்தடுத்து விபத்து

ஆந்திர மாநிலம் காக்கிநாடாவில் இருந்து ஆயில் ஏற்றிக்கொண்டு ஒரு டேங்கர் லாரி ஈரோடு மாவட்டத்திற்கு புறப்பட்டது. தர்மபுரி மாவட்டம் தொப்பூர் கணவாய் வழியாக நேற்று முன்தினம் லாரி வந்து கொண்டு இருந்தது. இந்த லாரியை ஆந்திராவை சேர்ந்த டிரைவர் நரசிம்மையா (வயது40) ஓட்டி வந்தார். இவருடன் மாற்று டிரைவராக ஆந்திர மாநிலத்தை சேர்ந்த ரமணன் (40) உடன் வந்தார்.

அப்போது தொப்பூர் கணவாய் முதல் வளவை கடந்தபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து டேங்கர் லாரி முன்னால் சென்ற கார் மற்றும் அரசு பஸ் மீது அடுத்தடுத்து மோதி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்து நடந்த சிறிது நேரத்திலேயே, பின்னால் விறகு ஏற்றி வந்த லாரி, டேங்கர் லாரி மோதியது.

போக்குவரத்து பாதிப்பு

இந்த விபத்தில் லாரி டிரைவர்கள் மற்றும் காரில் வந்த ஈரோடு மாவட்ட பா.ஜ.க. பிரமுகர் செந்தில்குமார் மற்றும் பஸ்சில் வந்த 10 பேர் உள்பட 17 பேர் காயம் அடைந்தனர். இந்த விபத்து குறித்து தகவல் அறிந்ததும் தொப்பூர் போலீசார் மற்றும் சுங்கச்சாவடி ரோந்து படையினர் விரைந்து வந்து விபத்தில் காயம் அடைந்த 17 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த விபத்தால் தர்மபுரி-சேலம் தேசிய நெடுஞ்சாலையில் விடிய, விடிய 4 மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. போலீசார் விபத்துக்குள்ளான 2 லாரிகள் மற்றும் கார், பஸ் ஆகியவற்றை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீரமைத்தனர். இந்த விபத்து குறித்து தொப்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story