ராயக்கோட்டை அருகே பால் வாகனம் மோதி வாலிபர் பலி-நண்பர் படுகாயம்


ராயக்கோட்டை அருகே பால் வாகனம் மோதி வாலிபர் பலி-நண்பர் படுகாயம்
x
தினத்தந்தி 23 Sep 2022 6:45 PM GMT (Updated: 23 Sep 2022 6:46 PM GMT)
கிருஷ்ணகிரி

ராயக்கோட்டை:

ராயக்கோட்டை அருகே மோட்டார் சைக்கிள் மீது பால் வாகனம் மோதிய விபத்தில் வாலிபர் பலியானார். மேலும் இந்த விபத்தில் அவருடைய நண்பர் படுகாயம் அடைந்தார்.

பால் வாகனம் மோதல்

ராயக்கோட்டை அருகே உள்ள கொப்பகரை ஊராட்சி தொட்டிநாயக்கனஅள்ளி கிராமத்தை சேர்ந்தவர் சின்னப்பன். இவருடைய மகன் மூர்த்தி (வயது 23). இவர் தனது குடும்ப நிலத்தில் விவசாய வேலைகளை செய்து வந்தார். அதே பகுதியை சேர்ந்தவர் அனி சந்திரன். இவருடைய மகன் ஹரிகிருஷ்ணன் (19). மூர்த்தி-ஹரிகிருஷ்ணன் நண்பர்கள் ஆவர்.

இந்தநிலையில் நேற்று முன்தினம் அவர்கள் 2 பேரும் ராயக்கோட்டைக்கு மோட்டார் சைக்கிளில் வந்தனர். பின்னர் இரவு அங்கிருந்து வீட்டுக்கு திரும்பி கொண்டிருந்தனர். மோட்டார் சைக்கிளை மூர்த்தி ஓட்டினார். வழியில் குட்டூர் பிரிவு ரோடு பகுதியில், எதிரே சூளகிரியில் இருந்து ராயக்கோட்டை நோக்கி சென்ற பால் வாகனம் மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

வாலிபர் பலி

இதில் மூர்த்தி, ஹரிகிருஷ்ணன் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தனர். சிறிது நேரத்தில் சம்பவ இடத்திலேயே வாலிபர் மூர்த்தி பரிதாபமாக இறந்தார். அந்த வழியாக சென்றவர்கள் ஹரிகிருஷ்ணனை மீட்டு சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

விபத்து குறித்து தகவல் அறிந்த ராயக்கோட்டை போலீசார் அங்கு விரைந்து சென்றனர். அவர்கள் பலியான மூர்த்தி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தேன்கனிக்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story