"5 ஆயிரம் தொல்லியல் பொருட்களை மீட்க நடவடிக்கை" - மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன்


5 ஆயிரம் தொல்லியல் பொருட்களை மீட்க நடவடிக்கை - மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன்
x
தினத்தந்தி 5 Aug 2023 6:45 PM GMT (Updated: 5 Aug 2023 6:45 PM GMT)

“ஆதிச்சநல்லூரில் இருந்து வெளிநாடுகளுக்கு கொண்டு செல்லப்பட்ட 5 ஆயிரம் தொல்லியல் பொருட்களை மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது” என்று அருங்காட்சியகம் அடிக்கல் நாட்டு விழாவில் மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் கூறினார்.

தூத்துக்குடி

ஸ்ரீவைகுண்டம்:

தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள ஆதிச்சநல்லூரில் உலகத்தரம் வாய்ந்த தொல்லியல் துறை அருங்காட்சியகம் அமைக்கப்படும் என்று கடந்த 2020-ம் ஆண்டு மத்திய பட்ஜெட்டில் நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் அறிவித்து இருந்தார்.

அடிக்கல் நாட்டு விழா

இதன் ஒருபகுதியாக ஆதிச்சநல்லூர் பரம்பு பகுதியில் கடந்த 2021-ம் ஆண்டு அகழாய்வு பணி தொடங்கியது. இதில் 100-க்கும் மேற்பட்ட முதுமக்கள் தாழிகள் மற்றும் ஏராளமான பழங்கால தொல்லியல் பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டன. முதுமக்கள் தாழிகளை திறந்து அவற்றில் உள்ள பொருட்களை ஆவணப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகிறது.

ஆதிச்சநல்லூரில் உலகத்தரம் வாய்ந்த அருங்காட்சியகம் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு விழா நேற்று நடந்தது. கனிமொழி எம்.பி. முன்னிலை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் கலந்து கொண்டு அடிக்கல் நாட்டினார். பின்னர் அவர் பேசியதாவது:-

கலாசாரம்

ஆதிச்சநல்லூர் பரம்பு பகுதியானது இரும்புக்காலத்தை சேர்ந்தது. இங்கு வாழ்ந்த பழங்கால மக்கள் உற்பத்தி செய்த பொருட்களை ஏற்றுமதி வணிகம் செய்து உள்ளனர். இங்கு இறந்தவர்களை தாழிகளில் இட்டு ஈமச்சடங்கு செய்து புதைத்து உள்ளனர். எகிப்து பிரமீடுகளில் உள்ளது போன்று, இங்கும் இறந்தவர்களின் உடலை மூலிகைகளால் பதப்படுத்தி, அவர்கள் வாழ்ந்தபோது பயன்படுத்திய நகைகள், ஆடைகள், உணவு போன்றவற்றுடன் சேர்த்து புதைத்துள்ளனர்.

இங்கு கி.மு. 270 மற்றும் 470 ஆண்டுகளுக்கு முன்புள்ள பழமையான பொருட்கள் கூட கிடைத்துள்ளன. மேலும் நெல் உமி, சிறு தானியங்களும் கிடைக்கப் பெற்றுள்ளன. இவற்றின் காலம் கி.மு. 657 வருடங்களுக்கு முந்தையவை என்று கண்டறியப்பட்டு உள்ளது. சுமார் 3,400 வருடங்களுக்கு முன்பே நமது முன்னோர்கள் நெல், தினை உள்ளிட்ட தானியங்களை பயிரிட்டுள்ளனர்.

பொதுமக்கள் பார்வைக்கு...

ஆதிச்சநல்லூரில் இருந்த 5 ஆயிரம் ஆண்டுகள் பழமையான பொருட்கள் எல்லாம் நெதர்லாந்து வரை எடுத்து செல்லப்பட்டு உள்ளது. அந்த பொருட்களை எல்லாம் மீண்டும் இங்கு கொண்டு வருவதற்கு இந்திய அரசின் மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

எதிர்கால தலைமுறையினர் நமது மூதாதையர்கள் இப்படிதான் வாழ்ந்தார்கள் என்று அறிந்து கொள்ளும் வகையில் பழங்கால பொருட்கள் கிடைத்த இடத்திலேயே பொதுமக்கள் பார்வைக்கு வைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.

கியூஆர் கோடு

இங்கு அமைக்கப்படும் அருங்காட்சியகத்தில் வைக்கப்படும் பழங்கால பொருட்களை மக்கள் எளிதாக அறிந்துகொள்ளும் வகையில், அறிவியல்பூர்வமாக அமைக்க வேண்டும் என்பதற்காக புதுப்புது தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படுகிறது. கண்ணாடிக்குள் வைக்கப்படும் பொருட்களில் 'கியூஆர்' கோடு பொறிக்கப்பட்டு கண்ணாடிக்கு மேலேயே பொதுமக்கள் தங்களது அலைபேசியை வைத்து ஸ்கேன் செய்தால், அந்த பொருள் பற்றி ஒலி வடிவில் அவர்களுக்கு தேவையான தகவல்கள் கிடைக்கும்.

நமது கலாசாரம் உயிர்ப்புடன் இருக்கும் வரைதான் நமது நாடும் உயிர்ப்புடன் இருக்கும். கலாசாரத்தை காப்பதற்காக 15 கலாசார மையங்களை உருவாக்கினோம். புத்த கலாசார மையங்களை இணைத்து புத்தயிசம் அமைக்கப்பட்டு உள்ளது. அதேபோன்று ராமாயண சின்னங்கள் உள்ள பகுதியை இணைத்து ராமாயிணசம், கிருஷ்ணாயிசம், இமாலயிசம் அமைக்கப்படுகிறது. 30 மாநிலங்களுக்கு நாட்டின் கலாசாரத்தை காப்பாற்றுவதற்காக 75 திட்டங்களுக்கு ரூ.6 ஆயிரம் கோடியை பிரதமர் வழங்கி உள்ளார்.

5 ஆயிரம் பொருட்கள்

நமது நாட்டில் இருந்து வெளிநாடுகளுக்கு கடத்தப்பட்ட 351 தொல்பொருட்கள் மீண்டும் கொண்டு வரப்பட்டு உள்ளன. ஆதிச்சநல்லூர் பகுதியில் இருந்த 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொருட்கள் வெளிநாடுகளில் உள்ளன. அதை மீண்டும் இங்கு கொண்டு வருவதற்கு இந்திய தொல்லியல் துறையினர் முயற்சிகள் மேற்கொண்டு வருகின்றனர். கலாசார இடங்களை பாதுகாக்க தனியார் துறையினர் பங்களிப்பு செய்யலாம். ஆதிச்சநல்லூர் பகுதியிலும் தனியார் துறையினர் தங்களது பங்களிப்பை வழங்கலாம். கலாசாரத்தை பாதுகாப்பதற்காக பல்வேறு நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்து உள்ளது. பனையோலைகள், செப்பு பட்டயங்களில் எழுதப்பட்ட வரலாற்று குறிப்புகளை டிஜிட்டல் மயமாக்கி வருகிறோம். 3 கோடி பக்கங்களில் பனையோலை குறிப்புகள் டிஜிட்டல் மயமாக்கப்பட்டு உள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.

சைட் மியூசியம்

முன்னதாக ஆதிச்சநல்லூர் பரம்பில் அகழாய்வு நடைபெற்ற இடத்தில் அமைக்கப்பட்ட தள அருங்காட்சியகம் எனும் சைட் மியூசியத்தை மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன் திறந்து வைத்து பார்வையிட்டார். அப்போது அவர், கனிமொழி எம்.பி.யை தனது அருகில் வரவழைத்து சைட் மியூசியத்தை திறந்து வைத்தார். பின்னர் அவர்கள் இருவரும் தள அருங்காட்சியகத்தில் உள்ள பழங்கால பொருட்களை பார்வையிட்டனர். பின்னர் 'தாமிரபரணி நதிக்கரை- ஆதிச்சநல்லூர் அகழ்வாராய்ச்சி' என்ற நூலை மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன் வெளியிட்டார்.

அமைச்சர்-கலெக்டர்

விழாவில் மீன்வளம் மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன், மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ், இந்திய தொல்லியல் துறை பொது இயக்குனர் (புதுடெல்லி) கிஷோர் குமார்பாசா, துணை பொது இயக்குனர் எஸ்.கே.மஞ்சுள், இயக்குனர் அருண்ராஜ், தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன், மாவட்ட பஞ்சாயத்து தலைவர் பிரம்மசக்தி, ஆதிச்சநல்லூர் பஞ்சாயத்து தலைவர் பார்வதி சங்கர்கணேஷ், மாவட்ட கவுன்சிலர் செல்வகுமார், தி.மு.க. மாநில வர்த்தக அணி இணை செயலாளர் உமரிசங்கர், தெற்கு மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் ராமஜெயம், பா.ஜ.க. மாநில துணை தலைவர் சசிகலா புஷ்பா, மாவட்ட தலைவர் சித்ராங்கதன், எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story