நடிகர் விஷாலுக்கு எதிரான வழக்கு தள்ளிவைப்பு -ஐகோர்ட்டு உத்தரவு


நடிகர் விஷாலுக்கு எதிரான வழக்கு தள்ளிவைப்பு -ஐகோர்ட்டு உத்தரவு
x

நடிகர் விஷாலுக்கு எதிரான வழக்கு தள்ளிவைப்பு -ஐகோர்ட்டு உத்தரவு.

சென்னை,

நடிகர் விஷாலுக்கு எதிராக சென்னை ஐகோர்ட்டில் லைக்கா நிறுவனம் தாக்கல் செய்த மனுவில், 'நடிகர் விஷால் பைனான்சியர் அன்புச்செழியனிடம் இருந்து வாங்கிய ரூ.21.29 கோடி கடனை நாங்கள் அடைத்தோம். பணத்தை திருப்பித் தரும் வரை விஷால் தயாரிக்கும் திரைப்படத்தின் உரிமையை எங்கள் நிறுவனத்துக்கு ஒப்படைக்க வேண்டும் என்று ஒப்பந்தம் செய்தோம். இந்த ஒப்பந்தத்தை மீறி, விஷால் தான் தயாரித்துள்ள வீரமே வாகை சூடும் என்ற சினிமா படத்தை வெளியிட முயற்சிக்கிறார். அதற்கு தடை விதிக்க வேண்டும்' என்று கோரப்பட்டு இருந்தது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எம்.சுந்தர், நடிகர் விஷால் பெயரில் உள்ள சொத்துகளின் விவரங்களை பிரமாண மனுவாக தாக்கல் செய்ய உத்தரவிட்டார்.

இந்நிலையில் இந்த வழக்கு நீதிபதி முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, 'சொத்து விவரத்தை தாக்கல் செய்ய பிறப்பித்த உத்தரவை எதிர்த்து ஐகோர்ட்டு டிவிசன் பெஞ்சில் மேல்முறையீடு செய்துள்ளோம். அந்த வழக்கு அடுத்த மாதம் விசாரணைக்கு வர உள்ளது. எனவே இந்த வழக்கை தள்ளிவைக்க வேண்டும்' என்று விஷால் தரப்பில் வாதிடப்பட்டது.

அதற்கு லைக்கா நிறுவனம் தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இருதரப்பு வாதத்தையும் கேட்ட நீதிபதி, விசாரணையை அடுத்த மாதம் 14-ந் தேதிக்கு தள்ளிவைத்து உத்தரவிட்டார்.


Next Story