ரீல்ஸ் வீடியோ எடுத்த மாணவர்களுக்கு அறிவுரை


ரீல்ஸ் வீடியோ எடுத்த மாணவர்களுக்கு அறிவுரை
x
தினத்தந்தி 24 Nov 2022 6:45 PM GMT (Updated: 24 Nov 2022 6:46 PM GMT)

போலீஸ் நிலையத்தில் ரீல்ஸ் வீடியோ எடுத்த மாணவர்களுக்கு அறிவுரை

விழுப்புரம்

விழுப்புரம்

விழுப்புரம் பழைய கோர்ட்டு கட்டிடம் எதிரில் நகர போலீஸ் நிலையம் உள்ளது. இந்த போலீஸ் நிலையத்தில் இருந்து அரசு பள்ளி மாணவர்கள் சிலர், ரீல்ஸ் வீடியோ எடுத்துள்ளனர். அதில் போலீஸ் நிலையத்தில் இருந்து மாணவர்கள் வெளியே வருவதுபோன்றும் அந்த வீடியோவுக்கு பின்னணி இசையாக போலீஸ் வாக்கி, டாக்கி மற்றும் சைரன் ஒலி இசைக்கும்போது மாணவர்கள் கெத்தாக நடந்து வருவதுபோன்றும் வீடியோ பதிவு செய்து அதனை சமூகவலைதளங்களில் பதிவிட்டனர்.

இந்த வீடியோ பதிவு செய்தவர்கள் யார்? என்பது குறித்து நகர போலீசார் விசாரணை நடத்தியதில் விழுப்புரம் காமராஜ் நகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வரும் 3 மாணவர்கள் என்பது தெரியவந்தது. இதையடுத்து அந்த மாணவர்களையும், அவர்களது பெற்றோரையும் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜலட்சுமி தலைமையிலான போலீசார் வரவழைத்து அவர்களுக்கு உரிய அறிவுரைகளையும், ஆலோசனைகளையும் வழங்கினர். இதுபோன்று ரீல்ஸ், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் போன்ற சமூகவலைதளங்களில் தவறான பதிவுகளை பதிவு செய்யக்கூடாது, இவ்வாறு பதிவு செய்வதால் இதனை பார்த்து மற்ற மாணவர்களுக்கும் தவறான எண்ணத்தை தூண்டிவிடும். இதுபோன்ற செயல்களில் ஒருபோதும் ஈடுபடக்கூடாது. நல்ல முறையில் படித்து அரசின் உயர்ந்த பதவிகளுக்கு வர வேண்டும். படிப்பில் கூடுதல் கவனம் செலுத்தி உங்களது பெற்றோருக்கும், நமது மாவட்டத்திற்கும் பெருமை சேர்க்க வேண்டும் என்று அம்மாணவர்களிடம் போலீசார் அறிவுரை வழங்கினர்.


Next Story