விழுப்புரம் அருகே விஷம் குடித்து வயதான தம்பதி தற்கொலை பெற்ற பிள்ளைகள் கவனிக்காததால் விபரீத முடிவு


விழுப்புரம் அருகே விஷம் குடித்து வயதான தம்பதி தற்கொலை பெற்ற பிள்ளைகள் கவனிக்காததால் விபரீத முடிவு
x
தினத்தந்தி 17 Jun 2023 6:45 PM GMT (Updated: 17 Jun 2023 6:46 PM GMT)

விழுப்புரம் அருகே பிள்ளைகள் கவனிக்காததால் மனமுடைந்த தம்பதி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டனர்.

விழுப்புரம்

திருவெண்ணெய்நல்லூர்,

விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் அருகே உள்ள சித்தானங்கூர் ஊராட்சி பழையபட்டணம் கிராமத்தை சேர்ந்தவர் நடராஜன் (வயது 80), விவசாயி. இவருடைய மனைவி லட்சுமி (75). இவர்களுக்கு ராஜேந்திரன், முருகன் ஆகிய 2 மகன்களும், 2 மகள்களும் உள்ளனர். 4 பேரும் திருமணமாகி வெளியூரில் வசித்து வருகின்றனர். இதனால் நடராஜனும், லட்சுமியும் பழையபட்டணம் கிராமத்தில் உள்ள வீட்டில் வசித்து வந்தனர்.

இந்த நிலையில் வயது முதிர்வின் காரணமாக நடராஜனால், விவசாயம் செய்ய முடியவில்லை. மேலும் அவருடைய பிள்ளைகளும் செலவுக்கு பணம் அனுப்பவில்லை என தெரிகிறது. வயது முதிர்ந்த அவர்களை பிள்ளைகள் சரிவர கவனிக்கவில்லை எனவும் கூறப்படுகிறது. இதன் காரணமாக அவர்கள் சாப்பாட்டுக்கு கூட வழியில்லாமல் இருந்து வந்தனர். பெற்ற பிள்ளைகள் யாரும் தங்களை கவனிக்கவில்லையே என்று மனவேதனை அடைந்த அவர்கள், தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தனர்.

தற்கொலை

அதன்படி அவர்கள் வீட்டில் இருந்த விஷத்தை எடுத்து ஒருவர் பின் ஒருவராக குடித்துள்ளனர். இதில் மயங்கிய நிலையில் கிடந்த அவர்களை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நடராஜனும், லட்சுமியும் பரிதாபமாக உயிரிழந்தனர்.

இதுகுறித்து திருவெண்ணெய்நல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வராஜ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

பெற்ற பிள்ளைகள் கவனிக்காததால் மனமுடைந்த தம்பதி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


Next Story