உடலில் காயங்களுடன் வயலில் பிணமாக கிடந்த முதியவர்


உடலில் காயங்களுடன் வயலில் பிணமாக கிடந்த முதியவர்
x

திருமருகல் அருகே முதியவர் ஒருவர் உடலில் காயங்களுடன் வயலில் பிணமாக கிடந்தார். இவர் அடித்துக்கொலை செய்யப்பட்டாரா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

நாகப்பட்டினம்

திட்டச்சேரி:

திருமருகல் அருகே முதியவர் ஒருவர் உடலில் காயங்களுடன் வயலில் பிணமாக கிடந்தார். இவர் அடித்துக்கொலை செய்யப்பட்டாரா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

வயலில் பிணமாக கிடந்த முதியவர்

நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் ஆதலையூர் மேலத்தெருவை சேர்ந்தவர் கணேசன்(வயது 70). இவருடைய மனைவி கோவிந்தம்மாள். இவர்களுக்கு விஸ்வநாதன், கலையரசி என்ற மகன்கள் உள்ளனர். கணேசன், வெள்ளரசி திடல் பகுதியில் உள்ள ஒருவருக்கு சொந்தமான வயலில் நடைபெறும் பணிகளை மேற்பார்வை செய்து வந்தார். இரவு நேரங்களில் அந்த வயலில் உள்ள மின்மோட்டார் அறையில் தூங்குவது வழக்கம்.

நேற்று முன்தினம் இரவு வழக்கம் போல் அவர் மின்மோட்டார் அறையில் தூங்க சென்றுள்ளார். நேற்று காலை வயலில் கணேசன் நிர்வாண நிலையில் பிணமாக கிடந்துள்ளார். உடல் சேற்றில் புதைந்த நிலையில் இருந்துள்ளது. மேலும் அவரது முகத்தில் ரத்த காயங்கள் இருந்தது.

போலீசார் விசாரணை

இதை அந்த வழியாக சென்றவர்கள் பார்த்து திருக்கண்ணபுரம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் திருக்கண்ணபுரம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்துச்சென்று கணேசனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நாகை அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

தகவல் அறிந்த நாகை துணை போலீஸ் சூப்பிரண்டு பாலகிருஷ்ணன் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினார். மேலும் போலீஸ் மோப்பநாய் அங்கு வரவழைக்கப்பட்டது. அது கணேசன் உடல் கிடந்த இடத்தில் இருந்து சிறிது தூரம் ஓடிநின்று விட்டது. யாரையும் கவ்விப்பிடிக்கவில்லை.

கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்களை சேகரித்தனர்.

கொலை செய்யப்பட்டாரா?

இதுகுறித்த புகாரின்பேரில் திருக்கண்ணபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து கணேசன் நிர்வாண நிலையில் கிடந்ததாலும், அவரது முகத்தில் ரத்த காயம் இருந்ததாலும் அவர் அடித்துக்கொலை செய்யப்பட்டாரா? என விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story