திருவாடானை அருகே உள்ள அஞ்சுகோட்டை சுகாதார கட்டிடத்தை இடித்துவிட்டு புதிதாக கட்டப்படும் - மதுரை ஐகோர்ட்டில் தகவல்


திருவாடானை அருகே உள்ள அஞ்சுகோட்டை சுகாதார கட்டிடத்தை இடித்துவிட்டு புதிதாக கட்டப்படும் -  மதுரை ஐகோர்ட்டில் தகவல்
x

திருவாடானை அருகே உள்ள அஞ்சுகோட்டை சுகாதார கட்டிடத்தை இடித்து விட்டு புதிதாக கட்டப்படும் என்று மதுரை ஐகோர்ட்டில் தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

மதுரை


திருவாடானை அருகே உள்ள அஞ்சுகோட்டை சுகாதார கட்டிடத்தை இடித்து விட்டு புதிதாக கட்டப்படும் என்று மதுரை ஐகோர்ட்டில் தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

சுகாதார நிலையம்

மனிதநேய மக்கள் கட்சியின் வக்கீல் அணி மாநில துணை செயலாளர் கலந்தர் ஆசிக் அகமது, மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-

ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே உள்ள அஞ்சுகோட்டையில் அரசு துணை சுகாதார நிலையம் கடந்த 30 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. இங்கு 20-க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து சளி, காய்ச்சல், விஷ வண்டுகள், பாம்புகள் கடித்தல் உள்ளிட்ட நோய்களுக்காக இங்கு வரும் குழந்தைகள், பெண்கள் மற்றும் முதியவர்கள் உள்பட அனைவருக்கும் முதலுதவி சிகிச்சையும் அப்பகுதி கர்ப்பிணி பெண்களுக்கு மகப்பேறு கால சிகிச்சையும் அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த கட்டிடம் கட்டி பல ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டதால் மேற்கூரையில் உள்ள சிமெண்ட் காரைகள் அடிக்கடி கீழே விழுந்து வருகிறது.

இதனால் கடந்த சில மாதங்களாக அங்கு பணியில் உள்ள 2 செவிலியர்களும் இந்த துணை சுகாதார நிலையத்திற்குள் வர அச்சப்படுவதால் அந்த கட்டிடம் பெரும்பாலான நேரங்களில் பூட்டியே கிடக்கிறது. எனவே உடனடியாக போர்க்கால நடவடிக்கையாக அஞ்சுகோட்டை துணை சுகாதார நிலைய கட்டிடத்தை அகற்றி விட்டு புதிய கட்டிடம் கட்டுவதற்கு அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.

கட்டிடம் இடிக்க நடவடிக்கை

இந்த வழக்கு நீதிபதிகள் ரமேஷ், ஆஷா ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது நீதிபதிகள், நோயாளிகள் சிகிச்சை பெற வரும் ஆஸ்பத்திரியானது, பாதுகாப்பின்றி உள்ள கட்டிடத்தில் செயல்படுவது ஏன்? என்று கேள்வி எழுப்பினர்.

அதற்கு அரசு வக்கீல் ஆஜராகி, அஞ்சுகோட்டை துணை சுகாதார நிலைய கட்டிடம் விரைவில் அகற்றப்பட்டு புதிய கட்டிடம் கட்டுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.

விசாரணை முடிவில் புதிய கட்டிடம் கட்டுவதற்கு நடவடிக்கை எடுத்தது குறித்து அரசு தரப்பில் வருகிற 8-ந் தேதி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.


Next Story