பழனி முருகன் கோவிலில் அன்னாபிஷேகம்


பழனி முருகன் கோவிலில் அன்னாபிஷேகம்
x

உலக நலன் வேண்டி பழனி முருகன் கோவிலில் அன்னாபிஷேகம் நடந்தது.

திண்டுக்கல்

பழனி முருகன் கோவிலில் ஆண்டுதோறும் ஆனி மாத கேட்டை நட்சத்திர நாளன்று அன்னாபிஷேகம் நடத்தப்பட்டு வருகிறது. அப்போது மழைவளம் பெருகவும், உலகநலன் வேண்டியும், மக்கள் பசி, பிணி இன்றி வாழவும் பூஜைகள் செய்யப்படுகிறது. அதன்படி இந்த ஆண்டுக்கான அன்னாபிஷேக நிகழ்ச்சி சித்தனாதன் சன்ஸ் சார்பில் பழனி முருகன் கோவில் மண்டபத்தில் நடந்தது. முன்னதாக தங்க சப்பரத்தில் 3 கலசங்களில் புனிதநீர், 108 வலம்புரி சங்குகளில் புண்ணிய தலங்களில் இருந்து கொண்டு வரப்பட்ட தீர்த்தம் ஆகியவை வைத்து சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. தொடர்ந்து 108 வலம்புரி சங்குகளுக்கு முன்பு கந்த ஹோமம், பூர்ணாகுதி நடைபெற்று, கலசங்களுக்கு தீபாராதனை காட்டப்பட்டது.

இதைத்தொடர்ந்து உச்சிக்கால பூஜையில் மூலவருக்கு 16 வகை அபிஷேகம், கலச அபிஷேகம், 108 வலம்புரி சங்கு அபிஷேகம் நடைபெற்றது. பின்பு மஞ்சள் நிற அன்னத்தால் மூலவருக்கு அலங்காரம் செய்யப்பட்டு, கிரீடம் வைக்கப்பட்டு அன்னத்தால் அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து 16 வகை தீபாராதனை காட்டப்பட்டது. முடிவில் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.

நிகழ்ச்சியில் சித்தனாதன் சன்ஸ் சிவனேசன், தனசேகர், பழனிவேலு, அசோக், செந்தில், கார்த்திக், குமரகுரு, தினேஷ் உள்பட பலர் கலந்துகொண்டனர். பூஜை ஏற்பாடுகள் பட்டத்து குருக்கள் அமிர்தலிங்கம், செல்வசுப்பிரமணியம் மற்றும் கோவில் குருக்கள், மிராசுதாரர்கள் செய்திருந்தனர்.


Next Story