உதயநிதி ஸ்டாலினை அமைச்சராக்க வேண்டும்; திண்டுக்கல் தி.மு.க. செயற்குழு கூட்டத்தில் தீர்மானம்


உதயநிதி ஸ்டாலினை அமைச்சராக்க வேண்டும்; திண்டுக்கல் தி.மு.க. செயற்குழு கூட்டத்தில் தீர்மானம்
x

உதயநிதி ஸ்டாலினை அமைச்சராக்க வேண்டும் என்று திண்டுக்கல் தி.மு.க. செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

திண்டுக்கல்

திண்டுக்கல் கிழக்கு, மேற்கு மாவட்ட தி.மு.க. செயற்குழு கூட்டம், கட்சி அலுவலகத்தில் இன்று நடைபெற்றது. இதற்கு தி.மு.க. துணை பொதுச்செயலாளரும், கூட்டுறவுத்துறை அமைச்சருமான இ.பெரியசாமி தலைமை தாங்கினார். மேற்கு மாவட்ட செயலாளரும், உணவுத்துறை அமைச்சருமான அர.சக்கரபாணி, கிழக்கு மாவட்ட செயலாளர் இ.பெ.செந்தில்குமார் எம்.எல்.ஏ. ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இந்த கூட்டத்தில் முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் 99-வது பிறந்தநாளை மாவட்டம் முழுவதும் கொண்டாட வேண்டும். அதையொட்டி நலத்திட்ட உதவிகள் வழங்குதல், மரக்கன்று நடுதல், ரத்ததான முகாம், மருத்துவ முகாம் நடத்த வேண்டும். மேலும் சட்டசபை தேர்தல் மற்றும் உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க. வெற்றிக்காக உழைத்த இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலினை அமைச்சராக்க வேண்டும். ஒட்டன்சத்திரத்தில் வருகிற 4-ந்தேதி நடைபெறும் வேலைவாய்ப்பு முகாமில் 8-ம் வகுப்புக்கு மேல் படித்த அனைவரையும் பங்கேற்க செய்ய வேண்டும் என்று தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இதில் வேலுச்சாமி எம்.பி., காந்திராஜன் எம்.எல்.ஏ., மாவட்ட அவை தலைவர் மோகன், துணை செயலாளர்கள் நாகராஜன், தண்டபாணி, ராஜாமணி, பொருளாளர்கள் ஆண்டி அம்பலம், மணிமுருகன், மேயர் இளமதி, துணை மேயர் ராஜப்பா, மாநில வர்த்தகர் அணி இணை செயலாளர் ஜெயன் மற்றும் மாவட்ட, ஒன்றிய, நகர, சார்பு அணி நிர்வாகிகள், ஒன்றியக்குழு தலைவர்கள் நகராட்சி, பேரூராட்சி தலைவர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.


Related Tags :
Next Story