தமிழ்நாடு பசுமை சாம்பியன் விருதுக்கு விண்ணப்பிக்கலாம்


தமிழ்நாடு பசுமை சாம்பியன் விருதுக்கு விண்ணப்பிக்கலாம்
x

தமிழ்நாடு பசுமை சாம்பியன் விருதுக்கு விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.

திருவண்ணாமலை

தமிழ்நாடு பசுமை சாம்பியன் விருதுக்கு விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு அரசின் சார்பில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தங்களை முழுமையாக அர்ப்பணித்தவர்களுக்கு பசுமை சாம்பியன் விருது வழங்கப்படுகிறது. இந்த விருது தமிழக அளவில் 100 பேருக்கு வழங்கி தலா ரூ.1 லட்சம் வீதம் பண முடிப்பும் வழங்கப்பட உள்ளது.

சுற்றுச்சூழல் கல்வி மற்றும் பயிற்சி, சுற்றுச்சூழல் விழிப்புணர்வு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு, பசுமை தயாரிப்புகள், பசுமை தொழில்நுட்பம் தொடர்பான விஞ்ஞான ஆய்வுகள், நிலைத்தகு வளர்ச்சி, திடக்கழிவு மேலாண்மை மற்றம் நீர்நிலைகள் பாதுகாப்பு, காலநிலை மாற்றத்திற்கு உட்படுதல் மற்றும் தணிப்பு நடவடிக்கை, காற்று மாசு குறைத்தல், பிளாஸ்டிக் கழிவுகளின் மறுசுழற்சி மற்றும் கட்டுப்பாட்டு நடவடிக்கை, சுற்றுச்சூழல் மறுசீரமைப்பு மற்றும் பாதுகாப்பு, கடலோர பாதுகாப்பு மேலாண்மை போன்றவற்றில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வை சிறப்பாக செய்திருப்பவர்கள் அல்லது சிறப்பாக செய்த அமைப்புகள், நிறுவனங்கள் விண்ணப்பிக்கலாம்.

இவ்வாறு செயல்படுத்திய நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள், குடியிருப்போர் நலச்சங்கங்கள், தனிநபர்கள், உள்ளாட்சி அமைப்புகள், தொழிற்சாலைகளுக்கு பசுமை சாம்பியன் விருது வழங்கப்படும்.

தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம், திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் தலைமையில் அமைக்கப்பட்ட பசுமை சாம்பியன் விருது தேர்வு செய்யும் குழு மூலம் திருவண்ணாமலை மாவட்டத்தில் தகுதிவாய்ந்த 3 தனிநபர்கள் அல்லது நிறுவனங்கள் ஒவ்வொரு வருடமும் தேர்வு செய்யும்.

இதற்கான விண்ணப்பப்படிவம் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் www.tnpcb.gov.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். உரிய ஆவணங்களுடன் கூடிய பூர்த்தி செய்யப்பட்ட 2 விண்ணப்பங்கள் மற்றும் பதிவேற்றம் செய்யப்பட்ட குறுந்தகடு (டி.வி.டி.) ஆகியவை உள்ளடக்கிய உறையின் மேல் பசுமை சாம்பியன் விருது என குறிப்பிட்டு மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் ஏப்ரல் 15-ந் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என கலெக்டர் முருகேஷ் தெரிவித்து உள்ளார்.


Next Story