மனைவி, கள்ளக்காதலன் உள்பட 4 பேர் கைது


மனைவி, கள்ளக்காதலன் உள்பட 4 பேர் கைது
x
தினத்தந்தி 17 Sep 2022 6:45 PM GMT (Updated: 17 Sep 2022 5:18 PM GMT)

தொப்பூர் அருகே செங்கல் சூளை காண்டிராக்டர் கொலை வழக்கில் அவரது மனைவி, கள்ளக்காதலன் உள்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர். மனைவி போலீசாரிடம் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.

தர்மபுரி

நல்லம்பள்ளி:

தொப்பூர் அருகே செங்கல் சூளை காண்டிராக்டர் கொலை வழக்கில் அவரது மனைவி, கள்ளக்காதலன் உள்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர். மனைவி போலீசாரிடம் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-

காண்டிராக்டர்

தர்மபுரி மாவட்டம் தொப்பூர் அருகே பொடாரன்கொட்டாய் கிராமத்தை சேர்ந்தவர் கோவிந்தன் (வயது37). செங்கல் சூளை காண்டிராக்டர். இவருடைய மனைவி கவிதா (33). இவர்களுக்கு 2 மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். கடந்த ஜூலை மாதம் 23-ந் தேதி வீட்டில் கோவிந்தன் உடலில் காயங்களுடன் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் தொப்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

மேலும் இந்த வழக்கில் துப்பு துலக்க தனிப்படை அமைத்து போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். அப்போது கவிதா யாருடன் பேசுகிறார் என்பதை வைத்தும், செல்போன் டவர் லோகேசனை வைத்தும் போலீசார் கண்காணித்தனர். அப்போது கவிதா, தனசேகரன் மற்றும் சிலருடன் அடிக்கடி பேசியது தெரியவந்தது.

கள்ளக்காதல்

இதையடுத்து போலீசார் கவிதா, சேலம் மாவட்டம் தீவட்டிப்பட்டி அருகே உள்ள உம்பிளிக்கம்பட்டியை சேர்ந்த தனசேகரன் (44), பழனிசாமி (42), இளையராஜா (23) ஆகிய 4 பேரையும் பிடித்து தீவிர விசாரணை நடத்தினர். அப்போது கவிதா போலீசாரிடம் பரபரப்பு வாக்குமூலம் அளித்தார். அதன் விவரம் வருமாறு:-

செங்கல் சூளை காண்டிராக்டரான எனது கணவர் ஆந்திராவில் குடும்பத்துடன் வசித்து வந்தார். செங்கல்சூளை பணிக்காக தனசேகரன், பழனிசாமி, இளையராஜா ஆகிய 3 பேருக்கும் முன்பணம் கொடுத்து ஆந்திராவுக்கு எனது கணவர் அழைத்து வந்தார். எனக்கும், தனசேகரனுக்கும் பழக்கம் ஏற்பட்டது. இது நாளடைவில் எங்களுக்குள் கள்ளக்காதலாக மாறியது.

கழுத்தை இறுக்கி கொன்றோம்

இதனால் நாங்கள் 2 பேரும் அடிக்கடி தொடர்பில் இருந்து வந்தோம். எங்களது கள்ளக்காதல் விவகாரம் கணவருக்கு தெரிந்து விட்டது. இதனால் அவர் என்னை சொந்த ஊருக்கே அழைத்து வந்துவிட்டார். இருப்பினும் நான் தனசேகரனுடன் தொடர்ந்து கள்ளத்தொடர்பில் இருந்து வந்தேன். தனசேகரன் உள்பட 3 பேரும் வாங்கிய முன்பணத்தை கேட்டு எனது கணவர் அவர்களிடம் தகராறு செய்து வந்தார்.

அவர்கள் 3 பேரும் பணத்தை கொடுக்காமல் ஏமாற்றி வருவதற்கும் நீ தான் காரணம் என கூறி, என்னிடம் கணவர் அடிக்கடி தகராறு செய்து வந்தார். எனது கணவர் தொடர்ந்து என்னை டார்ச்சர் செய்து வந்ததால், நானும், தனசேகரனும் எனது கணவரை தீர்த்து கட்ட திட்டம் தீட்டினோம். அதன்படி சம்பவத்தன்று நாங்கள் 2 பேரும் பழனிசாமி, இளையராஜா ஆகியோருடன் சேர்ந்து வீட்டில் இருந்த கோவிந்தன் வாயை பொத்தியும், கழுத்தை இறுக்கியும், மர்ம உறுப்பை சேதப்படுத்தியும் கொன்றோம் என்று போலீசாரிடம் தெரிவித்துள்ளார்.

4 பேர் கைது

இதையடுத்து கவிதா, தனசேகரன், பழனிசாமி, இளையராஜா ஆகிய 4 பேரையும் போலீசார் நேற்று கைது செய்தனர். பின்னர் அவர்கள் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.


Next Story