கைதான போலீஸ் இன்ஸ்பெக்டர் சிறையில் அடைப்பு


கைதான போலீஸ் இன்ஸ்பெக்டர் சிறையில் அடைப்பு
x
தினத்தந்தி 24 Nov 2022 6:45 PM GMT (Updated: 24 Nov 2022 6:46 PM GMT)

திருக்கோவிலூர் இருளர் பெண்கள் பலாத்கார வழக்கில் கைதான போலீஸ் இன்ஸ்பெக்டர் சிறையில் அடைக்கப்பட்டார்

விழுப்புரம்

விழுப்புரம்

பலாத்கார வழக்கு

கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூரை அடுத்த டி.மண்டபத்தில் பழங்குடி இருளர் சமுதாயத்தை சேர்ந்த 4 பெண்களை விசாரணை என்ற பெயரில் போலீசார் அழைத்துச்சென்று பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது.

இதுகுறித்த புகாரின்பேரில் அப்போதைய திருக்கோவிலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சீனிவாசன், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ராமநாதன், ஏட்டு தனசேகரன், போலீஸ்காரர்கள் பக்தவச்சலம், கார்த்திகேயன் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இவ்வழக்கு விசாரணை விழுப்புரத்தில் உள்ள எஸ்.சி., எஸ்.டி. வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.

இன்ஸ்பெக்டர் சிறையில் அடைப்பு

இவ்வழக்கில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ராமநாதன் உள்ளிட்ட 4 போலீசாருக்கு ஏற்கனவே ஜாமீன் வழங்கப்பட்டது. தலைமறைவாக இருந்த இன்ஸ்பெக்டர் சீனிவாசன் கடந்த 14-ந் தேதி ஜாமீன் கோரி தாக்கல் செய்தமனுவை விழுப்புரம் கோர்ட்டு தள்ளுபடி செய்ததை அடுத்து அவர் கைது செய்யப்பட்டார். தொடர்ந்து அவர் நேற்று முன்தினம் 2-வது முறையாக ஜாமீன் கேட்டு தாக்கல் செய்த மனுவையும் கோா்ட்டு தள்ளுபடி செய்தது.

இந்த நிலையில் நெஞ்சுவலியால் முண்டியம்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த இன்ஸ்பெக்டர் சீனிவாசன் உடல்நிலை குணமானதும் அங்குள்ள டாக்டர்கள் கொடுத்த மருத்துவ பரிசோதனை அறிக்கையின் அடிப்படையில் நேற்று மாலை அவர் விழுப்புரம் வேடம்பட்டில் உள்ள சிறையில் அடைக்கப்பட்டார்.


Next Story