குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் மறியல் செய்ய முயன்ற மக்கள்


குடிநீர் கேட்டு  காலிக்குடங்களுடன் மறியல் செய்ய முயன்ற மக்கள்
x

தேனி அல்லிநகரம் நகராட்சியில் குடிநீர் கேட்டு காலிகுடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட முயன்றனர்

தேனி

தேனி அல்லிநகரம் நகராட்சி 24-வது வார்டு பவர் ஹவுஸ் தெருவில் வசிக்கும் மக்களுக்கு கடந்த 10 நாட்களாக சீராக குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை. குறைந்த நேரம் வினியோகம் செய்யும் குடிநீரிலும் சாக்கடை கலந்து வந்ததாக கூறப்படுகிறது.

இதனால் அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் சிலர் இன்று காலையில் காலிக்குடங்களுடன் சாலை மறியல் செய்ய முயன்றனர். இதற்காக அவர்கள் பெரியகுளம் சாலைக்கு திரண்டு வந்தனர். தகவல் அறிந்ததும் நகராட்சி அலுவலர்கள் அங்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது தங்கள் பகுதிக்கு சீராகவும், சுகாதாரமாகவும் குடிநீர் வினியோகம் செய்ய வேண்டும் என்று மக்கள் வலியுறுத்தினர். சீராக குடிநீர் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று நகராட்சி அலுவலர்கள் உறுதி அளித்ததால் பொதுமக்கள் மறியல் முயற்சியை கைவிட்டு கலைந்து சென்றனர்.


Next Story