கல்லூரிகளுக்கு இடையேயான தடகள போட்டி


கல்லூரிகளுக்கு இடையேயான தடகள போட்டி
x

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்திற்கு உட்பட்ட கல்லூரிகளுக்கு இடையேயான தடகள போட்டி நெல்லையில் நடந்தது

திருநெல்வேலி

நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்திற்கு உட்பட்ட கல்லூரிகளுக்கு இடையேயான தடகள போட்டி நேற்று தொடங்கியது.

தடகள போட்டி

நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்திற்கு உட்பட்ட கல்லூரிகளுக்கான தடகள போட்டி நேற்று காலையில், பாளையங்கோட்டை அண்ணா விளையாட்டு அரங்கில் தொடங்கியது. இந்த போட்டியில் நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் இருந்து 74-க்கும் அதிகமான கல்லூரிகளில் இருந்து 800-க்கும் அதிகமான வீரர்கள் கலந்து கொண்டனர். இதில் ஓட்டப்பந்தயம், நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், குண்டு எறிதல், தட்டு எறிதல், சங்கிலி குண்டு எறிதல், ஈட்டி எறிதல் உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்படுகிறது.

இந்த போட்டியை பல்கலைக்கழக துணை வேந்தர் சந்திரசேகர் தலைமை தாங்கி சுடர் ஜோதியினை ஏற்றி தொடங்கி வைத்தார். திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரி முதல்வர் மகேந்திரன் வாழ்த்துரையாற்றினார். நிகழ்ச்சியில் பல்கலைக்கழக விளையாட்டு மைய இயக்குனர் ஆறுமுகம் வரவேற்றார். பல்கலைக்கழக உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டுத்துறை முன்னாள் இயக்குனர் சண்முகநாதன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். முதல்நாள் போட்டியில் ஆண்களுக்கு 9 போட்டிகளும், பெண்களுக்கு 7 போட்டிகளும் நடந்தது.

பரிசளிப்பு விழா

2 நாட்கள் நடக்கும் இந்த போட்டியில் வெற்றி பெற்ற வீரர்களுக்கு இன்று (செவ்வாய்க்கிழமை) மாலையில் பரிசுகள் வழங்கப்படும். இந்த பரிசளிப்பு விழாவில் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக பதிவாளர் அண்ணாதுரை கலந்து கொண்டு தலைமை தாங்கி பரிசுகள் வழங்குகிறார். மாவட்ட விளையாட்டு அலுவலர் கிருஷ்ணசக்கரவர்த்தி கலந்து கொள்கிறார்.

இந்த தகவல் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.


Next Story