மனைவி மீது மோட்டார் சைக்கிளை ஏற்றி கொலை செய்ய முயற்சி: கணவர் கைது


தினத்தந்தி 24 Jan 2023 6:45 PM GMT (Updated: 24 Jan 2023 6:46 PM GMT)

நாலாட்டின்புத்தூர் அருகே மனைவி மீது மோட்டார் சைக்கிளை ஏற்றி கொலை செய்ய முயன்ற கணவரை போலீசார் கைது செய்தனர்.

தூத்துக்குடி

நாலாட்டின்புத்தூர்:

நாலாட்டின்புத்தூர் அருகே உள்ள விட்டிலாபுரம் வடக்கு தெருவை சேர்ந்த சுப்பாராஜ் மகன் சந்திரமோகன் (வயது 39). டிரைவரான இவருக்கு ராதா (35) என்ற மனைவியும், ஸ்ரீதரன் (8), லோகேஷ் (6) என்ற மகன்களும் உள்ளனர். சந்திரமோகன் - ராதா தம்பதியினர் தற்போது பிரிந்து விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர். மகன்கள் இருவரும் தாய் ராதாவுடன் வசித்து வந்தனர்.

இந்நிலையில் நேற்று ராதா தெருவில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே மோட்டார் சைக்கிளில் வந்த சந்திரமோகன், மனைவி மீதுள்ள கோபத்தில் மோட்டார் சைக்கிளை அவர் மீது ஏற்றியுள்ளார்.

இதில் படுகாயம் அடைந்த அவரை உறவினர்கள் மீட்டு கோவில்பட்டி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு ராதாவுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதுதொடர்பாக ராதா கொடுத்த புகாரின் பேரில் நாலாட்டின்புத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுகாதேவி வழக்குப்பதிவு செய்து சந்திரமோகனை கைது செய்தார்.


Next Story