பழுதான குடிநீர் மேல்நிலைநீர்தேக்கத் தொட்டி: அச்சத்தில் கிராம மக்கள்; இடித்து அகற்ற கோரிக்கை


பழுதான குடிநீர் மேல்நிலைநீர்தேக்கத் தொட்டி: அச்சத்தில் கிராம மக்கள்; இடித்து அகற்ற கோரிக்கை
x

பழுதான குடிநீர் மேல்நிலைநீர்தேக்கத் தொட்டி எப்போது விழுமோ என்ற அச்சத்தில் கிராம மக்கள் உள்ளனர். அதை இடித்து அகற்ற பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருவள்ளூர்

பழுதான குடிநீர் தொட்டி

பள்ளிப்பட்டு தாலுகா வெங்கடாஜு குப்பம் கிராமத்தில் சுமார் ஆயிரத்திற்கு மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இந்த கிராம மக்களின் குடிநீர் தேவையை போக்க பல ஆண்டுகளுக்கு முன்பு குடிநீர் மேல்நிலைநீர்தேக்கத் தொட்டி அமைக்கப்பட்டது. இந்த குடிநீர் மேல்நிலைநீர்தேக்கத் தொட்டி பழுதடைந்ததால் மற்றொரு குடிநீர் மேல்நிலைநீர்தேக்கத் தொட்டி அமைக்கப்பட்டது. இந்த புதிய குடிநீர் மேல்நிலைநீர்தேக்கத் தொட்டி மூலம் கிராம மக்களுக்கு தண்ணீர் வழங்கப்பட்டு வருகிறது. இந்த தண்ணீர் போதவில்லை என்றும், கிராமத்தில் உள்ள சில பகுதிகளுக்கு சீரான குடிநீர் வரவில்லை என்றும் பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

இடித்து அகற்ற கோரிக்கை

இந்த நிலையில் பழுதடைந்த இந்த பழைய குடிநீர் மேல்நிலைநீர்தேக்கத் தொட்டியின் மேற்கூரை நேற்று முன்தினம் திடீரென இடிந்து விழுந்தது. பயங்கர சத்தத்துடன் மேற்கூரை விழுந்ததால் பொதுமக்கள் பீதியடைந்தனர். குடியிருப்புக்கு மத்தியில் உள்ள இந்த குடிநீர் தொட்டி எந்த நேரத்தில் இடிந்து விழுந்து விடுமோ என்ற அச்சத்தில் கிராம மக்கள் உள்ளனர்.

எனவே பழுதான இந்த பழைய குடிநீர் மேல்நிலைநீர்தேக்கத் தொட்டியை இடித்து அகற்றிவிட்டு புதிய குடிநீர் மேல்நிலைநீர்தேக்கத் தொட்டி மூலம் கிராம மக்களுக்கு சீரான குடிநீர் வழங்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story