விவசாயிகளின் வருமானத்தை பெருக்க வங்கிகள் உறுதுணையாக இருக்க வேண்டும்


விவசாயிகளின் வருமானத்தை பெருக்க வங்கிகள் உறுதுணையாக இருக்க வேண்டும்
x

விவசாயிகளின் வருமானத்தை பெருக்க வங்கிகள் உறுதுணையாக இருக்க வேண்டும் என கடன் திட்ட அறிக்கையை கலெக்டர் அமர்குஷ்வாஹா வெளியிட்டு பேசினார்.

திருப்பத்தூர்

விவசாயிகளின் வருமானத்தை பெருக்க வங்கிகள் உறுதுணையாக இருக்க வேண்டும் என கடன் திட்ட அறிக்கையை கலெக்டர் அமர்குஷ்வாஹா வெளியிட்டு பேசினார்.

கடன் திட்ட அறிக்கை

திருப்பத்தூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் 2023-24-ம் ஆண்டுக்கான வளம் சார்ந்த கடன் திட்ட அறிக்கையை கலெக்டர் அமர்குஷ்வாஹா வெளியிட்டார். அப்போது அவர் பேசியதாவது;-

தமிழகத்தின் ஊரக மற்றும் வேளாண் வளர்ச்சி பணியில் முக்கிய பங்குவகிக்கும் நபார்டு வங்கி, திருப்பத்தூர் மாவட்டத்தில் கிடைக்கப்பெற்ற வளம் சார்ந்த தகவல்களை சேகரித்து அதன் மூலம் ரூ4825.76 கோடி அளவுக்கு கடனாற்றல் உள்ளது என 2023-24 ஆண்டுக்கான வளம் சார்ந்த கடன் திட்டத்தில் மதிப்பீடு செய்துள்ளது.

விவசாயத்தில் நீண்டகால கடன் வழங்குவதற்கான சாத்தியக்கூறுகளை இத்திட்டம் விளக்குகிறது. இதுபோன்ற கடன் வசதிகள் விவசாயத்தில் அடிப்படை கட்டுமான வசதிகளை பெருக்கி, விவசாயத்தை ஒரு லாபகரமான வளம்நிறைந்த தொழிலாக மாற்றிட உதவும். வேளாண்மையில் எந்திரமயமாக்கல், சொட்டு மற்றும் தெளிப்பு நீர் பாசன முறையை பயன்படுத்துதல், கால்நடை வளர்ப்பை விவசாயத்தின் ஒரு அங்கமாக செய்தல், விவசாயிகளின் வருமானத்தை பெருக்க உதவிடும். வங்கிகள் மேலும் இது போன்ற முதலீடுகளுக்கு உறுதுணையாக இருக்க வேண்டும்.

இரட்டிப்பு ஆக்கும் நோக்கம்

இக்கடன் திட்ட அறிக்கை, பல அரசு துறைகள், வங்கிகள், மற்றும் அனைத்து துறை சார்ந்த அதிகாரிகளின் ஆலோசனை மற்றும் புள்ளி விவர அடிப்படையில் தயாரிக்கப்பட்டுள்ளது. விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பு ஆக்கும் மத்திய அரசின் நோக்கத்தையும்கருத்தில் கொண்டு இந்த வளம் சார்ந்த கடன் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. வளம் சார்ந்த கடன் திட்ட அறிக்கையின் உதவியுடன் மாவட்டத்திற்கான வருடாந்திர கடன் திட்டம் தயாரிக்கப்படும் என்றும் வங்கிகள் மதிப்பிடப்பட்ட கடன் திறன்களை உணர பின்பற்ற வேண்டிய யுக்திகள் இந்த திட்ட ஆவணத்தில் விவரிக்கப்பட்டுள்ளன. வங்கிகள் தங்கள் இலக்குகளை அடைய திட்ட ஆவணத்தை பயன்படுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அவர் பேசினார்.

நிகழ்ச்சியில் இந்தியன் வங்கியின் மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் அருண்பாண்டியன், வேளாண்மை துணை இயக்குனர் பச்சையப்பன், வேளாண்மை வணிகத்துறை துணை இயக்குனர் செல்வராஜ், வேளாண்மை அறிவியில் நிலையம் சுந்தர ராஜ், நபார்டு வங்கியின் மாவட்ட வளர்ச்சி மேலாளர் பிரவீன் பாபு, வங்கிகளுக்கான மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் அரசுதுறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


Next Story