108 ஆம்புலன்ஸில் குவா... குவா... தக்க நேரத்தில் பிரசவம் பார்த்த ஊழியர்களுக்கு குவியும் பாராட்டு


108 ஆம்புலன்ஸில் குவா... குவா... தக்க நேரத்தில் பிரசவம் பார்த்த ஊழியர்களுக்கு குவியும் பாராட்டு
x

புதுக்கோட்டை அருகே 108 ஆம்புலன்ஸில் பெண்ணுக்கு ஆண் குழந்தையும் மற்றொரு பெண்ணுக்கு வீட்டில் பெண் குழந்தையும் பிறந்தது.

புதுக்கோட்டை:

புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசல் அருகே உள்ள காட்டுப்பட்டியை சேர்ந்தவர் சுபாஸ் சந்திரபோஸ் என்பவரின் மனைவி பவித்ரா (வயது 22). நிறைமாத கர்ப்பிணியான இவருக்கு நேற்றிரவு பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து உறவினர்கள் அவரை இலுப்பூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.

அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் புதுக்கோட்டை இராணியர் மருத்துவமனைக்கு அனுப்ப முடிவு செய்தனர். இதைத் தொடர்ந்து 108 ஆம்புலன்ஸில் பவித்ராவை அழைத்து செல்லும் போது பிரசவ வலி அதிகரித்துள்ளது. இதனால் நிலைமையை உணர்ந்த 108 ஆம்புலன்ஸ் மருத்துவ உதவியாளர் பூபதிராஜா, பைலட் தேவபாஸ்கரன் ஆகியோர் சாலையோரம் ஆம்புலன்சை நிறுத்தி கர்ப்பிணிக்கு பிரசவம் பார்த்தனர் அப்போது சுகப்பிரசவமாக பவித்ராவிற்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது.

இதனையடுத்து உடனடியாக தாயும், சேயும் புதுக்கோட்டை இராணியர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். பின்னர் தாயும் சேயும் நலமுடன் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

இதேபோன்று நேற்று முன்தினம் காலை ஆண்டியப்பட்டியை சேர்ந்த காட்டுராஜா என்பவரின் மனைவி அஞ்சலை (வயது-29) என்பவருக்கு பிரசவவலி ஏற்பட்டது அப்போது அவரின் உறவினர்கள் பிரசவதற்காக 108 ஆம்புலன்சை அழைத்தனர். பின்னர் ஆம்புலன்சில் ஏற்ற சென்ற போது பிரசவவலி அதிகமானதால் 108 ஆம்புலன்ஸ் மருத்துவ உதவியாளர் பூபதிராஜா, பைலட் தேவபாஸ்கரன் ஆகியோர் வீட்டிலே பிரசவம் பார்த்தனர். அப்போது அஞ்சலைக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது. பின்னர் தாயையும் சேயையும் மீட்டு அப்பகுதியில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

தக்க நேரத்தில், பிரசவம் பார்த்து தாய் மற்றும் குழந்தையை காப்பாற்றிய 108 ஆம்புலன்ஸ் ஊழியர்களை உறவினர்கள் மற்றும் அப்பகுதி பொதுமக்கள் பாராட்டினர்.


Related Tags :
Next Story