பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து குறைந்ததுநீர்மட்டம் 98 அடிக்கு கீழ் சென்றது


பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து குறைந்ததுநீர்மட்டம் 98 அடிக்கு கீழ் சென்றது
x

பவானிசாகர் அணை

ஈரோடு

பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து குறைந்த காரணத்தால் அணையின் நீர்மட்டம் 98 அடிக்கு கீழ் சென்றது.

பவானிசாகர் அணை

சத்தியமங்கலத்தில் இருந்து மேற்கே 16 கி.மீ தூரத்திலும் கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் இருந்து வடகிழக்கில் 36 கி.மீ தூரத்திலும் பவானி ஆறு, மோயாறு கலக்கும் இடத்தில் அமைந்துள்ளது பவானிசாகர் அணை. தென்னிந்தியாவின் மிகப்பெரிய மண் அணை என்ற பெருமையும், தமிழ்நாட்டில் 2-வது பெரிய அணை என்ற பெருமையும் இந்த அணைக்கு உண்டு. இந்த அணையின் மொத்த நீர்மட்ட உயரம் 105 அடி என கணக்கிடப்படுகிறது.

பவானிசாகர் அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்கால் வழியாக 5 மதகுகள் மூலம் திறக்கப்படும் தண்ணீரின் மூலம் ஈரோடு, திருப்பூர், கரூர் ஆகிய மாவட்டங்களை சேர்ந்த 2 லட்சத்து 7 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. இதேபோல் பவானி ஆற்றில் 9 மதகுகள் மூலம் திறக்கப்படும் தண்ணீரின் மூலம் தடப்பள்ளி, அரக்கன்கோட்டை மற்றும் காலிங்கராயன் பாசன வாய்க்கால்கள் மூலம் நேரடியாகவும், மறைமுகமாகவும் சுமார் 50 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. இதுதவிர ஈரோடு மாவட்டத்தின் முக்கிய குடிநீர் ஆதாரமாக விளங்குவது பவானிசாகர் அணை என்பது குறிப்பிடத்தக்கது.

நீர்வரத்து குறைந்தது

நேற்று முன்தினம் மாலை 4 மணி நிலவரப்படி பவானிசாகர் அணைக்கு வினாடிக்கு 628 கன அடி தண்ணீர் வந்தது. அணையின் நீர்மட்டம் 98.24 அடியாக இருந்தது. அணையில் இருந்து பவானி ஆற்றில் மட்டும் வினாடிக்கு 1,150 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது.

பவானிசாகர் அணையின் நீர்பிடிப்பு பகுதியான நீலகிரி மலைப்பகுதியில் மழையின்றி வறண்ட வானிலை காணப்படுகிறது. இதனால் அணைக்கு நீர்வரத்தும் குறைந்துள்ளது. நேற்று மாலை 4 மணி நிலவரப்படி பவானிசாகர் அணைக்கு வினாடிக்கு 573 கன அடி தண்ணீர் வந்தது. அணையின் நீர்மட்டம் 97.98 அடியாக சரிந்தது. அணையில் இருந்து பவானி ஆற்றில் பாசனம் மற்றும் குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 1,150 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது. கீழ்பவானி வாய்க்காலில் பாசனத்துக்காக வினாடிக்கு ஆயிரத்து 800 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது.


Next Story