தேயிலை செடிகளில் கொப்புள நோய் தாக்குதல்


தேயிலை செடிகளில் கொப்புள நோய் தாக்குதல்
x
தினத்தந்தி 14 Dec 2022 6:45 PM GMT (Updated: 14 Dec 2022 6:47 PM GMT)

கோத்தகிரியில் நிலவும் மாறுபட்ட காலநிலையால், தேயிலை செடிகளில் கொப்புள நோய் தாக்கி வருகிறது.

நீலகிரி

கோத்தகிரி,

கோத்தகிரியில் நிலவும் மாறுபட்ட காலநிலையால், தேயிலை செடிகளில் கொப்புள நோய் தாக்கி வருகிறது.

கொப்புள நோய் பாதிப்பு

நீலகிரி மாவட்ட மக்களின் பிரதான தொழிலாக தேயிலை விவசாயம் உள்ளது. 60 ஆயிரம் சிறு, குறு விவசாயிகள் தேயிலை விவசாயத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கோத்தகிரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் தொடர் மழை பெய்து வருகிறது. மழையுடன் கூடிய பனிமூட்டமான சீதோஷ்ண காலநிலை நிலவுவதால், தேயிலை செடிகளின் இயல்பான வளர்ச்சி பாதிக்கப்பட்டு உள்ளது.

இதனால் செடிகளில் கொப்புள நோய் தாக்கி வருகிறது. இளம் தண்டு மற்றும் கொழுந்து இலைகளை இந்த நோய் தாக்குவதால், 50 சதவீதம் வரை மகசூல் குறையும் அபாயம் ஏற்பட்டு உள்ளது. மேலும் கோத்தகிரி பகுதியில் சில தொழிற்சாலைகளில் ஒரு கொழுந்து மற்றும் 2 இலையுடன் கூடிய தேயிலை மட்டும் கொள்முதல் செய்யப்படுகிறது. 5 இலை கொண்ட தேயிலையை வாங்க மறுத்து வரும் நிலையில், தற்போது தேயிலை செடிகளில் உள்ள கொழுந்துகளில் கொப்புள நோய் பாதிப்பு ஏற்பட்டு வருவதால் விவசாயிகள் கவலை அடைந்து வருகின்றனர்.

அகற்ற வேண்டும்

இதுகுறித்து தேயிலை வாரிய அதிகாரிகள் கூறியதாவது:-

மாறுபட்ட காலநிலை மற்றும் போதிய சூரிய வெளிச்சம் இல்லாததால் கொப்புள நோய் தாக்கி வருகிறது. தேயிலை செடிகளில் கொப்புள நோயை கட்டுப்படுத்த தேயிலை தோட்டங்களில் அதிக நிழல் தரும் மரங்கள் மற்றும் அதன் கிளைகளை அகற்றி, தேயிலை செடிகள் மீது சூரிய வெளிச்சம் படுமாறு செய்ய வேண்டும். செடிகளில் கொப்புள நோய் பாதிப்பது தெரியவந்தால், பாதிக்கப்பட்ட இலைகள் மற்றும் கொழுந்துகளை கவாத்து மூலம் அகற்ற வேண்டும்.

எக்ஸோ கன்சோல் 200 மில்லி லிட்டர் மற்றும் காப்பர் ஆக்ஸிகுளோரைடு 210 கிராம் ஆகியவற்றின் கலவையை 7 நாட்கள் இடைவெளி விட்டு தெளிப்பான் மூலம் தேயிலை செடிகளுக்கு தெளிக்க வேண்டும். இதேபோல பிராப்பிகானாசோல் 125 மில்லி லிட்டர் மற்றும் காப்பர் ஆக்ஸிகுளோரைடு 210 கிராம் கலவையை தெளிப்பான் மூலம் தெளிப்பதன் மூலம் இந்த நோயை கட்டுப்படுத்த முடியும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.


Next Story