பழனியில் மண்டல அளவிலான ஆணழகன் போட்டி


பழனியில் மண்டல அளவிலான ஆணழகன் போட்டி
x

பழனியில் மண்டல அளவிலான ஆணழகன் போட்டி நடைபெற்றது.

திண்டுக்கல்

திண்டுக்கல் மாவட்ட அமெச்சூர் ஆணழகன் மற்றும் பிட்னஸ் சங்கம் சார்பில், மண்டல அளவிலான ஆணழகன் போட்டி பழனியில் இன்று நடைபெற்றது. இதில் திண்டுக்கல், கோவை, திருப்பூர், நீலகிரி, தூத்துக்குடி, சேலம், தேனி என பல்வேறு மாவட்டங்களில் இருந்து 160 பேர் கலந்துகொண்டனர்.

55, 60, 65, 70, 75, 80, 85 உள்ளிட்ட எடைகளின் அடிப்படையில் 7 பிரிவுகளாக தனித்தனியாக போட்டிகள் நடைபெற்றன. இதில் கலந்துகொண்ட இளைஞர்கள் தங்களது கட்டுமஸ்தான உடல் அசைவுகளை செய்து அசத்தினர். பின்னர் ஒவ்வொரு பிரிவிலும் முதல் 3 இடங்களை பிடித்தவர்களுக்கு பதக்கம் மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது.

பின்னர் அந்தந்த பிரிவில் முதலிடம் பிடித்தவர்களுக்கு மண்டல அளவிலான போட்டி நடைபெற்றது. இதில் தூத்துக்குடியை சேர்ந்த லோகேஷ்வர் முதலிடம் பிடித்தார். தேனியை சேர்ந்த பாலகிருஷ்ணன் 2-ம் இடமும், தூத்துக்குடியை சேர்ந்த ராஜா 3-ம் இடமும் பிடித்தனர். பின்னர் அவர்களுக்கு பரிசு, பதக்கம் மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் சரவணப்பொய்கை கந்தவிலாஸ் பாஸ்கரன், வணிகர் சங்க பேரமைப்பு பழனி நகர தலைவர் ஜே.பி.சரவணன், வள்ளுவர் தியேட்டர் செந்தில் மற்றும் அமெச்சூர் ஆணழகன் பிட்னஸ் சங்க தலைவர் சுப்புராஜ், செயலாளர் நாகவடிவேல் மற்றும் சங்க நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.


Related Tags :
Next Story