மத்திய ரிசர்வ் படை போலீஸ்காரரை அரிவாளால் வெட்டிய அண்ணன், தம்பி கைது


மத்திய ரிசர்வ் படை போலீஸ்காரரை அரிவாளால் வெட்டிய அண்ணன், தம்பி கைது
x
தினத்தந்தி 29 March 2023 6:45 PM GMT (Updated: 29 March 2023 6:45 PM GMT)

புதுக்கோட்டையில் மத்திய ரிசர்வ் படை போலீஸ்காரரை அரிவாளால் வெட்டிய அண்ணன், தம்பியை போலீசார் கைது செய்தனர்.

தூத்துக்குடி

புதுக்கோட்டையில் மத்திய ரிசர்வ் படை போலீஸ்காரரை அரிவாளால் வெட்டிய அண்ணன், தம்பியை போலீசார் கைது செய்தனர்.

மதுபோதையில் தகராறு

தூத்துக்குடி அருகே உள்ள முடிவைத்தானேந்தலை சேர்ந்தவர் இசக்கிமுத்து. இவருடைய மகன் சுரேஷ் பாபு (வயது 27). சண்டிகரில் மத்திய ரிசர்வ் போலீஸ் படையில் பணியாற்றி வருகிறார். கடந்த 24-ந் தேதி முடிவைத்தானேந்தல் பகுதியில் நடந்த ஒரு திருமண நிகழ்ச்சியில் அதே பகுதியை சேர்ந்த பேச்சிமுத்து மகன்கள் பேச்சிராஜா (22), முத்துசெல்வம் (24) ஆகியோர் மதுபோதையில் தகராறு செய்து கொண்டு இருந்தார்களாம்.

இதனை பார்த்த சுரேஷ் பாபுவின் அண்ணன் ஜம்மு காஷ்மீரில் மத்திய ரிசர்வ் போலீஸ் படையில் பணியாற்றி வரும் மகராஜன் என்பவர் சத்தம் போட்டுள்ளார். அப்போது அண்ணன், தம்பி 2 பேரும் சேர்ந்து மகராஜன் கையில் அணிந்து இருந்த 2 பவுன் கைச்செயினை பறித்து சென்று விட்டார்களாம்.

கைது

இந்த நிலையில் சுரேஷ்பாபு விடுமுறையில் ஊருக்கு வந்துள்ளார். இங்கு நடந்த சம்பவம் குறித்து அறிந்த சுரேஷ் பாபு நேற்று முன்தினம் புதுக்கோட்டை போலீசில் புகார் அளிக்க சென்றாராம். இதனை அறிந்த பேச்சிராஜா, முத்துசெல்வம் ஆகிய 2 பேரும் சேர்ந்து போலீஸ் நிலையம் முன்பு வைத்து சுரேஷ் பாபுவை அரிவாளால் வெட்டினார்களாம்.

இதில் காயம் அடைந்த சுரேஷ் பாபு சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்த புகாரின் பேரில் புதுக்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து பேச்சிராஜா, முத்துசெல்வம் ஆகிய 2 பேரையும் நேற்று கைது செய்தனர்.


Next Story