நெட்டிக்குளத்தில் ஆகாயத் தாமரை செடிகள் அகற்றப்படுமா?


நெட்டிக்குளத்தில் ஆகாயத் தாமரை செடிகள்  அகற்றப்படுமா?
x
தினத்தந்தி 26 March 2023 6:45 PM GMT (Updated: 26 March 2023 6:47 PM GMT)

பொறையாறு அருகே நெட்டிக்குளத்தில் ஆகாயத் தாமரை செடிகள் அகற்றப்படுமா? என அப்பகுதி பொதுமக்கள் எதிர்பார்த்துள்ளனர்.

மயிலாடுதுறை

பொறையாறு:

பொறையாறு அருகே நெட்டிக்குளத்தில் ஆகாயத் தாமரை செடிகள் அகற்றப்படுமா? என அப்பகுதி பொதுமக்கள் எதிர்பார்த்துள்ளனர்.

நெட்டிக்குளம்

மயிலாடுதுறை மாவட்டம் பொறையாறு அருகே நல்லாடை ஊராட்சியில் காரைக்கால் சாலையின் அருகே நெட்டிக்குளம் உள்ளது. உள்நாட்டு மீனவ சங்கதிற்கு சொந்தமான இந்த குளத்தை நல்லாடை மற்றும் பனங்குடி பகுதியை சேர்ந்த பொதுமக்களும், கோவிலுக்கு செல்லும் பக்தர்கள், வாகனங்களில் செல்லும் சுற்றுலா பயணிகளும் பயன்படுத்தி வந்தனர். இவர்கள் இந்த குளத்து தண்ணீரை குளிப்பதற்காகவும், வீட்டு உபயோகத்திற்காகவும் பயன்படுத்தி வருகின்றனர்.

மேலும் இந்த குளத்தில் தான் அக்னீஸ்வரர் கோவில் சோமவாரம் தீர்த்தவாரி நடைபெறும். நல்லாடை அருகே பனங்குடி மாரியம்மன் கோவில் தீமிதி திருவிழா காலங்கள் உள்ளிட்ட முக்கிய நாட்களில் இந்த குளத்தில் இருந்து தான் புனித நீர் பூஜைக்காக எடுத்து செல்லப்படும்.

ஆகாயத்தாமரைகள்

இந்த நிலையில் இந்த நெட்டிக்குளத்தில் பல்வேறு ஆண்டுகளாக எந்தவித பராமரிப்பு பணிகளும் மேற்கொள்ளப்படவில்லை. இதனால் இந்த குளத்தில் தற்போது ஆகாயத்தாமரை செடிகள் மண்டி புதர் போல் காட்சி அளிக்கிறது. இதனால் குளத்தில் இறங்கி குளிக்க முடியாத நிலையில் பொதுமக்கள் உள்ளனர். தற்போது கோடை வெயில் தொடங்கிய நிலையில் குளத்திற்கு தண்ணீர் குடிக்க வரும் கால்நடைகளும் ஆகாய தாமரை செடிகளின் ஆக்கிரமிப்பினால் தண்ணீர் குடிக்க முடியாமல் சிரமமடைகின்றனர்.

தூர்வார வேண்டும்

எனவே நெட்டிக்குளத்தை தூர்வாரி ஆக்கிரமித்துள்ள ஆகாயத்தாமரைகளை அகற்றி மீண்டும் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்று மயிலாடுதுறை மாவட்ட நிர்வாகத்தையும், உள் நாட்டு மீனவ சங்கம், செம்பனார்கோவில் ஊராட்சி ஒன்றியம் மற்றும் நல்லாடை ஊராட்சி நிர்வாகத்திற்கும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story