கார் மோதி கல்லூரி மாணவி பலி


கார் மோதி கல்லூரி மாணவி பலி
x

செங்கத்தில் கார் மோதி கல்லூரி மாணவி பரிதாபமாக இறந்தார். அவரது தங்கை படுகாயம் அடைந்தார்.

திருவண்ணாமலை

செங்கம்

செங்கத்தில் கார் மோதி கல்லூரி மாணவி பரிதாபமாக இறந்தார். அவரது தங்கை படுகாயம் அடைந்தார்.

கார் மோதியது

செங்கம் நகரை சேர்ந்தவர் கமலக்கண்ணன், ஓய்வு பெற்ற ராணுவ வீரர். இவருடைய மகள் ஸ்ரீநிதி (வயது 19) ஆற்காடு அருகே உள்ள தனியார் கல்லூரியில் படித்து வந்தார். 2-வது மகள் கார்த்தியாயினி (16) 11-ம் வகுப்பு படித்து வருகிறார்.

இந்த நிலையில் இன்று ஸ்ரீநிதி கல்லூரிக்கு செல்ல புறப்பட்டார். அவரை பஸ் ஏற்றி விடுவதற்காக அவரது தங்கை கார்த்தியாயினியும் உடன் வந்தார். இருவரும் மோட்டார் சைக்கிளில் வந்தனர்.

செங்கம் போளூர் சாலையில் உள்ள பெட்ரோல் பங்க் அருகே சென்றபோது எதிரே வந்த கார் மோதியதில் 2 பேரும் தூக்கி வீசப்பட்டனர்.

மாணவி பலி

இதில் படுகாயம் அடைந்த 2 பேரையும் அப்பகுதியில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக செங்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பின்னர் மேல்சிகிச்சைக்காக கார்த்தியாயினி சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கும், ஸ்ரீநிதி திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கும் அனுப்பி வைக்கப்பட்டனர்.

அங்கு சிகிச்சை பலனின்றி ஸ்ரீநிதி பரிதாபமாக உயிரிழந்தார்.

மேலும் விபத்துக்குள்ளான காரை ஓட்டி வந்த முருகன் என்பவரும் சிகிச்சைக்காக கிருஷ்ணகிரியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்த விபத்து குறித்து செங்கம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணகுமரன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story