சட்டவிரோதமாக கைது செய்து பெண்ணை கொடுமைப்படுத்தியதாக வழக்கு: இன்ஸ்பெக்டர், சப்-இன்ஸ்பெக்டர்கள் மீது நடவடிக்கை- மதுரை கோர்ட்டு உத்தரவு

சட்டவிரோதமாக கைது செய்து பெண்ணை கொடுமைப்படுத்திய தாக தொடர்ந்த வழக்கில் மதுரை திலகர்திடல் போலீஸ் இன்ஸ்பெக்டர், சப்-இன்ஸ்பெக்டர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மதுரை கோர்ட்டு உத்தரவிட்டது.
சட்டவிரோதமாக கைது செய்து பெண்ணை கொடுமைப்படுத்திய தாக தொடர்ந்த வழக்கில் மதுரை திலகர்திடல் போலீஸ் இன்ஸ்பெக்டர், சப்-இன்ஸ்பெக்டர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மதுரை கோர்ட்டு உத்தரவிட்டது.
பெண் கைது
மதுரை சிம்மக்கல் ஒர்க் ஷாப் ரோடு பகுதியைச் சேர்ந்த விஜயலட்சுமி, என்பவர் மதுரை 2-வது மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-
நான் எனது கணவருடன் சேர்ந்து இதே பகுதியில் டயர் வியாபாரம் செய்து வருகிறேன். சட்டப்படிப்பு படித்து வருகிறேன். எனது கணவர் சரவணன் மாற்றுத்திறனாளி. அவரின் சகோதரர் எங்கள் கடையை சட்டவிரோதமாக அபகரிக்கும் நோக்கத்தில் பல்வேறு தொந்தரவுகளை அளித்து வருகிறார். அவர் கொடுத்த பொய்யான புகார் குறித்து முறையாக விசாரிக்காமல் என்னை போலீசார் கைது செய்தனர். பின்னர் ஜாமீனில் வெளியே வந்தேன்.
போலீசார் மிரட்டல்
விதிமுறைகளை பின்பற்றாமல் என்னை கைது செய்ததற்காக போலீசார் மீது குற்ற நடவடிக்கை கோரி வழக்கு தொடர்ந்தேன். அந்த வழக்கை வாபஸ் பெற வேண்டும் என்று போலீசார் தொடர்ந்து மிரட்டி வருகின்றனர்.
மதுரை திலகர் திடல் போலீஸ் இன்ஸ்பெக்டர் சங்கர் மற்றும் சப்-இன்ஸ்பெக்டர்கள் என் மீது மற்றொரு பொய்யான புகாரை பெற்று வழக்குப்பதிவு செய்து பல்வேறு கொடுமைகளுக்கு ஆளாக்கினர்.
எனவே திலகர் திடல் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் சங்கர், சப்-இன்ஸ்பெக்டர்கள் கதிரேசன் சொர்ண ராஜா ஆகியோர் மீது உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.
நடவடிக்கை
இந்த வழக்கு நீதிபதி கல்யாண மாரிமுத்து முன்பு விசாரணைக்கு வந்தது. விசாரணை முடிவில், திலகர் திடல் போலீஸ் இன்ஸ்பெக்டர் மற்றும் சப்-இன்ஸ்பெக்டர்கள் மீதான மனுதாரர் புகார் குறித்து திலகர் திடல் உதவி போலீஸ் கமிஷனர் முறையாக விசாரித்து எடுத்த நடவடிக்கை குறித்து, அடுத்த மாதம் (ஆகஸ்டு மாதம்) 4-ந்தேதி இந்த கோர்ட்டில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.
இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டார்.