நீதிமன்றத்தில் உள்ள வழக்குகளை சமரச முறையில் தீர்த்து கொள்ள வேண்டும்


நீதிமன்றத்தில் உள்ள வழக்குகளை சமரச முறையில் தீர்த்து கொள்ள வேண்டும்
x

நீதிமன்றத்தில் உள்ள வழக்குகளை சமரச முறையில் தீர்த்து கொள்ள வேண்டும் என மாவட்ட நீதிபதி சண்முகசுந்தரம் அறிவுரை கூறினார்.

கரூர்

முத்தரப்பு கூட்டம்

தமிழ்நாடு சமரசம் மற்றும் மத்தியஸ்த மையத்தின் உத்தரவுபடி கரூர் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் உள்ள கூட்டரங்கில் கரூர் மாவட்ட சமரச மையம் சார்பில் முத்தரப்பு கூட்டம் மற்றும் கருத்து பரிமாற்றம் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியை மாவட்ட ஒருங்கிணைப்பாளரும், மாவட்ட நீதிபதியுமான சண்முகசுந்தரம் தொடங்கி வைத்து, நீதிமன்றத்தில் உள்ள வழக்குகளை பொதுமக்கள் இலவசமாக சமரச தீர்வு மூலம் தீர்த்து கொள்ள முன்வர வேண்டும் என்றார்.

இதனைத்தொடர்ந்து சென்னை தமிழ்நாடு சமரச மையத்தின் மூத்த பயிற்சியாளர் சுதர்சனசுந்தர் கலந்து கொண்டு சமரசத்தின் முக்கியத்துவம் மற்றும் சிறப்பு அம்சங்கள் குறித்து விளக்கினார்.

விரைந்து தீர்வு ஏற்படும்...

இதையடுத்து அவர் கூறுகையில், நீதிமன்றத்தில் உள்ள வழக்குகளை சமரச முறையில் தீர்த்து கொள்வதால் இருதரப்பும் வெற்றி பெறலாம் என்றும், நிலுவையில் உள்ள வழக்குகளில் விரைந்து தீர்வு ஏற்படும் என்றும், வழக்குகளின் எண்ணிக்கையும் குறையும். எனவே வழக்குகளை சமரசமாக முடித்து கொள்ள பொதுமக்கள் முன் வரவேண்டும் என்றார். தொடர்ந்து கரூர் மாவட்ட பார் அசோசியேஷன் செயலாளர் தமிழ்வாணன், அட்வகேட் அசோசியேஷன் செயலாளர் வைத்தீஸ்வரன் மற்றும் குளித்தலை பார் அசோசியேஷன் சாகுல்ஹமீது ஆகியோர் பேசினர். இதில் நீதிபதிகள், வக்கீல்கள் மற்றும் நீதிமன்ற ஊழியர்கள் பலர் கலந்து கொண்டனர்.

இதற்கான ஏற்பாடுகளை கரூர் மாவட்ட சமரச மைய ஒருங்கிணைப்பாளர் பாக்கியம் செய்திருந்தார். முன்னதாக கரூர் மாவட்ட சமரச மைய ஒருங்கிணைப்பாளர் பாக்கியம் வரவேற்றார். முடிவில் தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் ராஜலிங்கம் நன்றி கூறினார்.


Next Story