சி.பி.சி.ஐ.டி. போலீசார் தாக்கல் செய்த குற்றப்பத்திரிகை நகல் ஸ்ரீமதியின் தாயிடம் ஒப்படைப்பு


சி.பி.சி.ஐ.டி. போலீசார் தாக்கல் செய்த குற்றப்பத்திரிகை நகல் ஸ்ரீமதியின்  தாயிடம் ஒப்படைப்பு
x
தினத்தந்தி 12 Jun 2023 6:45 PM GMT (Updated: 12 Jun 2023 6:46 PM GMT)

கள்ளக்குறிச்சி ஸ்ரீமதி வழக்கில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் தாக்கல் செய்த குற்றப்பத்திரிகை நகல், ஆவணங்கள் மாணவியின் தாயிடம் ஒப்படைக்கப்பட்டது. இதில் ஆட்சேபனை ஏதும் இருந்தால் தெரிவிக்குமாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

விழுப்புரம்

கடலூர் மாவட்டம் பெரியநெசலூர் கிராமத்தை சேர்ந்தவர் ராமலிங்கம் மகள் ஸ்ரீமதி (வயது 17). இவர் கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே கனியாமூரில் உள்ள சக்தி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார். பள்ளி விடுதியில் தங்கியிருந்து படித்து வந்த மாணவி ஸ்ரீமதி, கடந்த 2022-ம் ஆண்டு ஜூலை மாதம் 13-ந் தேதி மர்மமான முறையில் உயிரிழந்தார்.

இதுகுறித்து மாணவியின் தாய் செல்வி அளித்த புகாரின்பேரில் சந்தேக மரணம் என்ற பிரிவின் கீழ் சின்னசேலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து பள்ளி தாளாளர் ரவிக்குமார், செயலாளர் சாந்தி, முதல்வர் சிவசங்கரன், வேதியியல் ஆசிரியை ஹரிப்பிரியா, கணித ஆசிரியை கீர்த்திகா ஆகிய 5 பேரை கைது செய்தனர். பின்னர் இவ்வழக்கு சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது.

இதன் விசாரணை முடிந்து கடந்த மே மாதம் 15-ந் தேதி 1,362 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகையை விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் தாக்கல் செய்தனர். அதில், இவ்வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஆசிரியைகளான கீர்த்திகா, ஹரிப்பிரியா ஆகிய இருவரின் பெயர்களையும் வழக்கில் இருந்து சி.பி.சி.ஐ.டி. போலீசார் நீக்கம் செய்துள்ளனர்.

இதுதொடர்பாக ஆட்சேபனை இருந்தால் தெரிவிக்குமாறு ஸ்ரீமதியின் தாய் செல்விக்கு கோர்ட்டு சம்மன் அனுப்பியது.

ஆவணங்கள் ஒப்படைப்பு

இதையடுத்து ஸ்ரீமதியின் தாய் செல்வி, தனது வக்கீல்களுடன் கடந்த 5-ந் தேதி விழுப்புரம் கோர்ட்டில் ஆஜராகி, இவ்வழக்கில் இருந்து ஆசிரியைகள் இருவரையும் விடுவித்ததற்கு ஆட்சேபனை தெரிவிக்க இருப்பதாகவும், அதற்காக குற்றப்பத்திரிகை நகல் மற்றும் வழக்கு தொடர்பான ஆவணங்கள், சாட்சியங்களின் பதிவு விவரம் ஆகியவற்றை தங்களிடம் ஒப்படைக்குமாறு மனுதாக்கல் செய்தார். அதன்படி ஸ்ரீமதியின் தாய் கேட்ட ஆவணங்களை ஒப்படைக்க வேண்டும் என்று கோர்ட்டு உத்தரவிட்டது.

இதற்காக நேற்று ஸ்ரீமதியின் தாய் செல்வி, தனது வக்கீல்களுடன் விழுப்புரம் கோர்ட்டில் ஆஜராகினார். அவரிடம் குற்றப்பத்திரிகை நகல் மற்றும் வழக்கு தொடர்பான ஆவணங்கள், சாட்சியங்களின் பதிவு விவரம் ஆகியவை வழங்கப்பட்டது. தொடர்ந்து, இதுதொடர்பாக ஆட்சேபனை ஏதும் இருந்தால் வருகிற 21-ந் தேதி நேரில் ஆஜராகி தெரிவிக்குமாறு நீதிபதி புஷ்பராணி உத்தரவிட்டார்.


Next Story