இருந்திராப்பட்டி முத்துமாரியம்மன் கோவிலில் இன்று தேரோட்டம்

இருந்திராப்பட்டி முத்துமாரியம்மன் கோவிலில் தேரோட்டம் இன்று (திங்கட்கிழமை) நடக்கிறது.
இலுப்பூர் அருகே உள்ள இருந்திராப்பட்டியில் பிரசித்தி பெற்ற முத்துமாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் கடந்த மாதம் 26-ந் தேதி பங்குனி திருவிழா கொடியேற்றம் மற்றும் காப்புக்கட்டுதலுடன் தொடங்கியது. தொடர்ந்து விழா நாட்களில் தினமும் அம்மனுக்கு சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டு, அம்மன் வீதியுலா நடைபெற்றது. மேலும் தினமும் மண்டகப்படி நிகழ்ச்சிகளும் நடைபெற்று வருகிறது. முத்துமாரியம்மன் கோவில் திருவிழாவையொட்டி இலுப்பூர் சுற்று வட்டார கிராமங்களை சேர்ந்த பக்தர்கள் கடந்த சில நாட்களாக விரதம் இருந்து வந்தனர்.
நேற்று காலை முதல் பால்குடம் எடுத்தும், அலகு குத்தியும், பறவை காவடி எடுத்தும் கோவிலுக்கு ஊர்வலமாக வந்து, தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர். இதேபோல் கரும்பால் தொட்டில் கட்டி அதில் குழந்தையை வைத்து கோவிலுக்கு ஊர்வலமாக எடுத்து வந்தும், பொங்கல் வைத்தும் பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினார்கள். விழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று (திங்கட்கிழமை) நடைபெற உள்ளது. இதையொட்டி அலங்கரிக்கப்பட்ட தேரில் முத்துமாரியம்மனை எழுந்தருள செய்து, திரளான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுக்க உள்ளனர். இதற்கான ஏற்பாடுகளை விழா குழுவினரும், ஊர் பொதுமக்களும் செய்து வருகின்றனர்.