நாமக்கல் மாவட்டத்தில் கிறிஸ்தவ தேவாலயங்களை சீரமைக்க நிதிஉதவி-கலெக்டர் ஸ்ரேயாசிங் அறிவிப்பு


நாமக்கல் மாவட்டத்தில் கிறிஸ்தவ தேவாலயங்களை சீரமைக்க நிதிஉதவி-கலெக்டர் ஸ்ரேயாசிங் அறிவிப்பு
x

நாமக்கல் மாவட்டத்தில் பழுதான கிறிஸ்தவ தேவாலயங்களை சீரமைக்க நிதிஉதவி பெற விரும்புவோர் விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் ஸ்ரேயாசிங் அறிவித்து உள்ளார்.

நாமக்கல்

நாமக்கல்:

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

கிறிஸ்தவ தேவாலயம்

தமிழ்நாட்டில் சொந்த கட்டிடங்களில் இயங்கும் கிறிஸ்தவ தேவாலயங்களை பழுது பார்த்தல் மற்றும் சீரமைத்தல் பணிகள் மேற்கொள்வதற்கு நிதி உதவி வழங்கும் திட்டம் 2016-2017-ம் ஆண்டு முதல் அரசால் செயல்படுத்தப்பட்டு வருகிறது. தேவாலயத்தில் ஏற்பட்டுள்ள பழுதுகள் மற்றும் தேவாலய கட்டிடத்தின் வயது ஆகியவற்றை கருத்தில் கொண்டு 10 முதல் 15 ஆண்டு வரை இருப்பின் ரூ.1 லட்சமும், 15 முதல் 20 ஆண்டுக்குள் இருப்பின் ரூ.2 லட்சமும், 20 ஆண்டுக்கு மேற்பட்ட தேவாலயத்திற்கு ரூ.3 லட்சமும் நிதி உதவி வழங்கப்படுகிறது.

இந்த திட்டத்தின் கீழ் நிதி உதவி பெற தேவாலயம் 10 ஆண்டுகளுக்கு மேலாக சொந்த கட்டிடத்தில் இயங்கி இருத்தல் வேண்டும். தேவாலயம் கட்டப்பட்ட இடம் பதிவுத்துறையில் பதிவு செய்திருத்தல் வேண்டும். தேவாலயமும் பதிவு செய்திருக்கப்பட வேண்டும். தேவாலய சீரமைப்பு பணிக்காக வெளிநாட்டிலிருந்து எவ்வித நிதி உதவியும் பெற்றிருத்தல் கூடாது. சீரமைப்பு பணிக்காக ஒரு முறை நிதி உதவி அளிக்கப்பட்ட தேவாலயத்திற்கு மறுமுறை நிதி உதவி 5 ஆண்டுகளுக்கு பின்னர் வழங்கப்படும்.

விண்ணப்பிக்கலாம்

இதற்கான விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து உரிய ஆவணங்களுடன் நாமக்கல் மாவட்ட கலெக்டருக்கு அனுப்ப வேண்டும். இதற்கான விண்ணப்ப படிவம் மற்றும் சான்றிதழ் WWW.bcmbcmw@tn.gov.in என்ற இணையதள முகவரியில் வெளியிடப்பட்டு உள்ளது. இதனை பதிவிறக்கம் செய்தும் விண்ணப்பிக்கலாம்.

கலெக்டர் தலைமையிலான குழு அந்த விண்ணப்பங்களை பரிசீலனை செய்து, தகுதியின் அடிப்படையில் தேர்வு செய்து உரிய முன்மொழிவுகள் உடன் சிறுபான்மையினர் நல இயக்குனருக்கு நிதி உதவி வேண்டி பரிந்துரை செய்யும். மேலு விவரங்களுக்கு கலெக்டர் அலுவலகத்திலுள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தை அணுகலாம்.

இவ்வாறு அதில் அவர் கூறி உள்ளார்.


Next Story