கலெக்டர் அரவிந்த் இன்று தேசியக்கொடி ஏற்றுகிறார்


கலெக்டர் அரவிந்த் இன்று தேசியக்கொடி ஏற்றுகிறார்
x
தினத்தந்தி 25 Jan 2023 6:45 PM GMT (Updated: 25 Jan 2023 6:46 PM GMT)

குடியரசு தினத்தை முன்னிட்டு நாகர்கோவில் அண்ணா விளையாட்டு அரங்கத்தில் கலெக்டர் அரவிந்த் இன்று (வியாழக்கிழமை) தேசியக்கொடி ஏற்றுகிறார்.

கன்னியாகுமரி

நாகர்கோவில்:

குடியரசு தினத்தை முன்னிட்டு நாகர்கோவில் அண்ணா விளையாட்டு அரங்கத்தில் கலெக்டர் அரவிந்த் இன்று (வியாழக்கிழமை) தேசியக்கொடி ஏற்றுகிறார்.

குடியரசு தின விழா

நாடு முழுவதும் குடியரசு தின விழா இன்று (வியாழக்கிழமை) கொண்டாடப்பட உள்ளது. இதே போல குமரி மாவட்ட நிர்வாகம் சார்பில் நாகர்கோவில் அண்ணா விளையாட்டு அரங்கத்தில் குடியரசு தின விழா நடைபெற இருக்கிறது. விழாவில் காலை 8.10 மணிக்கு கலெக்டர் அரவிந்த் தேசியக்கொடியை ஏற்றி வைக்கிறார். பின்னர் திறந்த ஜீப்பில் சென்று போலீசாரின் அணிவகுப்பை பார்வையிடுகிறார். அப்போது மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் உடன் செல்கிறார்.

குடியரசு தின விழாவுக்கான ஏற்பாடுகள் அனைத்தும் அண்ணா விளையாட்டு அரங்கத்தில் தயார் நிலையில் உள்ளது. விழாவில் நடைபெறும் அணிவகுப்பு நிகழ்ச்சிக்கான ஒத்திகையில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.

3 அடுக்கு பாதுகாப்பு

அண்ணா விளையாட்டு அரங்கில் நேற்று நடந்த அணிவகுப்பு ஒத்திகையை கோட்டாட்சியர் சேதுராமலிங்கம் பார்வையிட்டார். அப்போது போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத்தும் உடன் இருந்தார். இதே போல மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகளும் குடியரசு தினவிழாவில் நடக்கிறது.

விழா நடைபெற உள்ள அண்ணா விளையாட்டு அரங்கம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதி முழுவதும் போலீசாரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டு உள்ளது. அங்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு உள்பட 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டு இருக்கிறது. அண்ணா விளையாட்டு அரங்க முன் பகுதியில் மெட்டல் டிடெக்டர் நுழைவு வாயில் அமைக்கப்பட்டு உள்ளது.

1200 போலீசார்

அதே சமயத்தில் குடியரசு தின விழாவையொட்டி மாவட்டம் முழுவதும் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இதற்காக 1,200 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். கடற்கரையோர பகுதிகளில் கடலோர பாதுகாப்பு குழும போலீசாருடன் இணைந்து போலீசாரும் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். பஸ் நிலையங்கள் மற்றும் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு உள்ளது.

மேலும் கடலில் ஏதேனும் மர்மப் படகு தென்பட்டால் உடனே தகவல் தெரிவிக்கும்படி கடலுக்கு மீன்பிடிக்க செல்லும் மீனவர்களிடம் போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.

விடுதிகளில் ஆய்வு

முக்கியமாக ரெயில் நிலையங்களில் பார்சல்கள் மற்றும் தண்டவாள பகுதிகளில் மெட்டல் டிடெக்டர் மூலம் போலீசார் ஆய்வு செய்தனர். ரெயில்வே பாலங்களிலும் ஆய்வு நடந்தது.

சுற்றுலாத்தலமான கன்னியாகுமரி மற்றும் நாகர்கோவில் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள தங்கும் விடுதிகளில் சந்தேகப்படும் படியாக யாரேனும் தங்கி உள்ளனரா? என நேற்று போலீசார் சோதனை மேற்கொண்டனர்.


Next Story