விழுப்புரம் மாவட்டத்தில் மகளிர் சுய உதவிக்குழுக்கள் சிறுதானிய உணவகம் அமைக்க விண்ணப்பிக்கலாம் கலெக்டர் தகவல்


விழுப்புரம் மாவட்டத்தில் மகளிர் சுய உதவிக்குழுக்கள் சிறுதானிய உணவகம் அமைக்க விண்ணப்பிக்கலாம் கலெக்டர் தகவல்
x
தினத்தந்தி 16 Jun 2023 6:45 PM GMT (Updated: 16 Jun 2023 6:46 PM GMT)

விழுப்புரம் மாவட்டத்தில் மகளிர் சுய உதவிக்குழுக்கள் சிறுதானிய உணவகம் அமைக்க விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட கலெக்டர் பழனி தெரிவித்துள்ளார்.

விழுப்புரம்

2023-ம் ஆண்டு சர்வதேச சிறுதானிய ஆண்டாக கொண்டாடப்படுவதால் தமிழ்நாடு அரசு, அனைத்து மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் மகளிர் சுய உதவிக்குழுக்கள் மூலம் சிறுதானிய உணவகம் அமைக்க உத்தேசித்துள்ளது. தமிழ்நாடு அரசு, சிறுதானிய உணவு வகைகளை பிரபலப்படுத்த பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக சிறுதானிய உற்பத்தியையும், பயன்பாட்டினையும் அதிகரிக்கவும், பாரம்பரிய உணவு பழக்க, வழக்கங்களை மீட்டெடுக்கவும், சிறுதானிய உணவுகளின் முக்கியத்துவத்தை மக்கள் மத்தியில் கொண்டு வருவதற்கும், இளைய தலைமுறையினரிடையே ஊட்டச்சத்து, ஆரோக்கியமான உணவுப்பழக்கத்தை ஊக்குவித்தல், குழந்தைகள், வளர் இளம்பெண்கள், கர்ப்பிணி பெண்கள், பாலூட்டும் தாய்மார்கள் சிறுதானிய உணவுகள் எடுத்துக்கொள்ள செய்து ஊட்டச்சத்து குறைபாடு இல்லாத சமுதாயத்தை உருவாக்குவதாகும்.

இதற்காக மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்கள் மூலம் சிறுதானிய உணவகம் அமைக்க மகளிர் சுய உதவிக்குழுக்கள், உற்பத்தியாளர் குழுக்கள், கூட்டமைப்புகளிடமிருந்து கீழ்கண்ட நிபந்தனைகளுடன் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மகளிர் குழு தொடங்கப்பட்டு குறைந்தபட்சம் 2 ஆண்டுகள் முடிவுற்றிருக்க வேண்டும், தேசிய கிராமப்புற வாழ்வாதார இயக்கம், மேலாண்மை இணையதளத்தில் பதிவு செய்திருக்க வேண்டும், கூட்டமைப்பாக இருக்கும்பட்சத்தில் தர மதிப்பீடு செய்யப்பட்டு ஏ அல்லது பி சான்று பெற்றிருக்க வேண்டும், உற்பத்தியாளர் குழுவாக இருக்கும்பட்சத்தில் தர மதிப்பீடு செய்யப்பட்டு திட்ட நிதி பெறப்பட்டிருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கலாம்

மகளிர் சுய உதவிக்குழு, உற்பத்தியாளர் குழு கூட்டமைப்பு, சிறுதானிய உணவு உற்பத்தி மற்றும் சிறுதானிய மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள் தயாரிப்பில் ஆர்வம் மற்றும் முன்அனுபவம் உடையவராக இருத்தல் வேண்டும். மாவட்ட கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகம் அமைந்துள்ள அல்லது 5 கிலோ மீட்டர் சுற்றளவிற்குள் ஊராட்சியின் மகளிர் சுய உதவிக்குழு, உற்பத்தியாளர் குழு, கூட்டமைப்பு மட்டுமே தேர்வு செய்ய வேண்டும், போன்ற நிபந்தனைகளுடன் விருப்பமுள்ள சுய உதவிக்குழுக்கள் தங்களது விவரத்துடன் மகளிர் திட்டத்தின் திட்ட இயக்குனர் அலுவலகத்தில் 30.6.2023-க்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

மேலும் இதுகுறித்த விரிவான விவரங்களை மாவட்ட கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் உள்ள ஒருங்கிணைந்த ஊரக வளர்ச்சித்துறை கட்டிடத்தில் செயல்படும் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்க திட்ட இயக்குனர் அலுவலகத்தை நேரில் அணுகி பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. மேற்கண்ட தகவல் விழுப்புரம் மாவட்ட கலெக்டர் பழனி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.


Next Story