பள்ளி மாணவர்களுக்கு கலெக்டர் விஷ்ணு பாராட்டு


பள்ளி மாணவர்களுக்கு கலெக்டர் விஷ்ணு பாராட்டு
x

மாநில அளவிலான கலைத்திறன் போட்டியில் வெற்றி பெற்ற பள்ளி மாணவர்களை மாவட்ட கலெக்டர் விஷ்ணு பாராட்டினார்.

திருநெல்வேலி

மாநில அளவிலான கலைத்திறன் போட்டியில் வெற்றி பெற்ற பள்ளி மாணவர்களை மாவட்ட கலெக்டர் விஷ்ணு பாராட்டினார்.

மாநில போட்டி

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின் பேரில், பள்ளி மாணவ, மாணவிகளின் கலைத்திறனை வளர்க்கும் விதமாக பல்வேறு கலைத்திறன் போட்டி நடத்தப்பட்டன. மாவட்ட அளவில் நடத்தப்பட்ட போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்கள் மாநில அளவிலான போட்டியில் கலந்து கொண்டனர்.

இதில் நெல்லை மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவி கனி இப்ராஹிமா பேச்சு போட்டியிலும், மதகநேரி அரசு உயர்நிலைப்பள்ளியை சேர்ந்த மாணவன் சுகிஷ்ணு அழகு கையெழுத்து போட்டியிலும், நரசிங்கநல்லூர் அரசு உயர்நிலைப்பள்ளி மாணவன் பழனி சண்முகம் ஓவிய போட்டியிலும், ரஸ்தா அரசு உயர்நிலைப்பள்ளி மாணவன் சினேஷ் செண்டை மேளம் போட்டியிலும், கல்லிடைக்குறிச்சி அரசு மேல்நிலைப்பள்ளி மாணவன் ஆனந்தராஜ் கார்ட்டூன் கேலிசித்திரம் வரைதல் போட்டியிலும், வள்ளியூர் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவன் கிருஷ்ணசெல்வமுகேஷ் நாதஸ்வரம் போட்டியிலும், மாணவன் குணா எதிர்கால கனவை வரைதல் போட்டியிலும் மற்றும் மாணவ, மாணவிகள் பலர் கலந்து கொண்டு பல்வேறு போட்டிகளிலும் வெற்றி பெற்றனர்.

கலெக்டர் பாராட்டு

மாநில போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்கள் நேற்று மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் அவரை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர். பள்ளி மாணவர்களை மாவட்ட கலெக்டர் விஷ்ணு பாராட்டினார்.

நிகழ்ச்சியில் உதவி கலெக்டர் (பயிற்சி) கோகுல், ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி உதவி திட்ட அலுவலர் சிவராஜ், முதன்மை கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் டைட்டஸ் ஜான் போஸ்கோ மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


Next Story