தினத்தந்தி புகார் பெட்டி
![தினத்தந்தி புகார் பெட்டி தினத்தந்தி புகார் பெட்டி](https://media.dailythanthi.com/h-upload/2022/08/29/847650-662996b5100959909p7.webp)
புகார் பெட்டி
ஆக்கிரமிப்பு
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் தாலுகா திருக்கலாபட்டி ஊராட்சி கீழநிலை கிராமத்தில் உள்ள குளத்தில் சீமை கருவேல மரங்கள் அதிக அளவில் வளர்ந்துள்ளன. இந்த குளத்தின் நீர் இப்பகுதி மக்களின் முக்கிய நீர் ஆதாரமாக உள்ளது. கருவேல மரங்களால் குளத்தின் நீர் வளம் பாதிக்கப்படும் சூழல் நிலவுகிறது. எனவே குளத்தில் உள்ள கருவேல மரங்களை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தினேஷ், திருப்பத்தூர்.
தேங்கி நிற்கும் கழிவுநீர்
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அச்சுக்கட்டு மண் எண்ணெய் பங்கின் அருகில் மழை நீர் தேங்கி சாலையை முற்றிலும் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இங்கு வருவோர் தேங்கிய கழிவுநீரில் நின்றபடியே மண் எண்ணெய் வாங்கி செல்கின்றனர். இதனால் இப்பகுதி மக்களுக்கு தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே இந்த பகுதியில் மேம்பட்ட சாலை அமைத்து மழைநீர் தேங்குவதை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சேதுராமன், திருப்பத்தூர்.
போக்குவரத்து நெரிசல்
சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் இருந்து மேலூர் செல்லும் பகுதியில் காலை மற்றும் மாலை நேரங்களில் வாகனஓட்டிகள் சிலர் தங்கள் இருசக்கர மற்றும் நான்குசக்கர வாகனங்களை சாலையில் நிறுத்தி செல்கின்றனர். போக்குவரத்து நெரிசல் மிக்க இந்த பகுதியில் இவ்வாறு நிறுத்தப்படும் வாகனங்களால் மற்ற வாகனங்கள் செல்வதற்கு இடையூறாக உள்ளது. இதனால் சிறு, சிறு விபத்துகளும் நிகழ்ந்து வருகிறது. எனவே சாலையில் வாகனங்களை நிறுத்துவதற்கு அதிகாரிகள் தடை செய்ய வேண்டும்.
ராஜாராம், திருப்புவனம்.
நாய்கள் தொல்லை
சிவகங்கை நகர் மற்றும் புறநகர் பகுதிகளில் நாய்கள் கூட்டம் கூட்டமாக சாலையில் சுற்றித்திரிகின்றன. இந்த நாய்கள் சாலையில் செல்பவர்களை துரத்துவதால் பெண்கள், குழந்தைகள் வீட்டை விட்டு வெளியே வர அச்சப்படுகின்றனர். மேலும் நாய்களால் வாகனவிபத்துகளும் நிகழ்ந்து வருகிறது. எனவே பொதுமக்களுக்கு தொல்லை தரும் நாய்களை பிடித்து அப்புறப்படுத்த சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நசீமாபேகம், சிவகங்கை.
நடவடிக்கை தேவை
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி புதிய பஸ் நிலையத்திற்கு தினந்தோறும் ஆயிரக்கணக்கானோர் வந்து செல்கின்றனர். தற்போது இந்த பஸ் நிலையத்தில் உள்ள கேட் சாய்ந்த நிலையில் உள்ளது. இதனால் கேட்டை கடந்து செல்ல பொதுமக்கள் சிரமப்படுகின்றனர். எனவே இந்த கேட்டை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அரசு, காரைக்குடி.