கட்டிட தொழிலாளி மர்மச்சாவு


கட்டிட தொழிலாளி மர்மச்சாவு
x

வேலூர் அருகே கட்டிட தொழிலாளி உடலில் காயங்களுடன் மர்மமான முறையில் இறந்தார். அவர் அடித்துக்கொலை செய்யப்பட்டாரா என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

வேலூர்

வேலூர் அருகே கட்டிட தொழிலாளி உடலில் காயங்களுடன் மர்மமான முறையில் இறந்தார். அவர் அடித்துக்கொலை செய்யப்பட்டாரா என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொழிலாளி மர்மச்சாவு

வேலூரை அடுத்த செம்பேடு பகுதியை சேர்ந்தவர் வெற்றிவேல் (வயது 60). டைல்ஸ் ஒட்டும் தொழிலாளி. இவருக்கும் அவரது அண்ணன் குப்புசாமி (64) என்பவருக்கும் இடையே நிலம் தொடர்பாக அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. மேலும் அவர்கள் ஒன்றாக சேர்ந்து அடிக்கடி மதுகுடிப்பதையும் வழக்கமாக கொண்டிருந்தனர். இந்தநிலையில் சம்பவத்தன்று வெற்றிவேல் மற்றும் குப்புசாமி ஆகியோர் சேர்ந்து மதுகுடித்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் அவர்களுக்குள் மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது.

வீட்டை விட்டு சென்ற வெற்றிவேல் வெகு நேரமாகியும் வீட்டுக்கு வராததால் அவரை தேடி அவரது மகன் விஜய் குப்புசாமியின் வீட்டுக்கு சென்றார். அப்போது அங்குள்ள மாட்டுக்கொட்டகையில் வெற்றிவேல் உடலில் காயங்களுடன் சுயநினைவின்றி கிடந்தார். இதையடுத்து அவரை விஜய், அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் உதவியுடன் வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு வெற்றிவேலை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

சந்தேக மரணம்

இதுகுறித்து பாகாயம் போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் தலைமையிலான போலீசார் வெற்றிவேலின் உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் சந்தேக மரணம் என வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதுகுறித்து போலீசார் கூறுகையில், நிலம் தொடர்பாக அண்ணன், தம்பி இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. சம்பவத்தன்று வெற்றிவேலின் உடலில் காயங்கள் இருந்தது. எனவே போதையில் இருந்த அவர்கள் ஒருவரைஒருவர் தாக்கிக்கொண்டிருக்கலாம் என்று கருதுகிறோம். குப்புசாமியின் உடலிலும் காயங்கள் உள்ளது தெரியவந்துள்ளது. எனினும் வெற்றிவேலின் பிரேத பரிசோதனை அறிக்கைக்கு பின்னரே அவரின் சாவுக்கான உண்மையான காரணம் தெரியவரும் என்றனர்.


Next Story