1,597 மையங்களில் கொரோனா தடுப்பூசி முகாம்; கலெக்டர் ஆய்வு


1,597 மையங்களில் கொரோனா தடுப்பூசி முகாம்;  கலெக்டர் ஆய்வு
x

1,597 மையங்களில் கொரோனா தடுப்பூசி முகாம் நடந்தது. இதனை கலெக்டர் ஆய்வு செய்தாா்.

ஈரோடு

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் வகையில், தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கொரோனா 4 -ம் அலையை தடுக்கும் வகையில் நேற்று தமிழகம் முழுவதும் மாபெரும் கொரோனா தடுப்பூசி முகாம் நடந்தது. அதன்படி ஈரோடு மாவட்டத்தில் உள்ள அரசு ஆஸ்பத்திரிகள், அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், நகர்ப்புற சுகாதார மையங்கள், பள்ளிக்கூடங்கள் உள்பட 1,597 மையங்களில் நேற்று காலை 7 மணி முதல் தடுப்பூசி முகாம் நடந்தது. 12 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு முதல் மற்றும் 2-ம் தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டது. இதேபோல் 18 வயதுக்கு மேற்பட்ட 2-ம் தவணை தடுப்பூசி செலுத்திக்கொண்டு 6 மாதங்கள் கடந்தவர்களுக்கு 3-ம் தவணை தடுப்பூசியான பூஸ்டர் தடுப்பூசியும் போடப்பட்டது.

தடுப்பூசி செலுத்தும் பணியில் மாவட்டம் முழுவதும் 3 ஆயிரத்து 196 பணியாளர்கள் ஈடுபட்டனர். 70 வாகனங்கள் முகாமிற்கு பயன்படுத்தப்பட்டன. பொதுமக்கள் அதிக கூடும் இடங்களான ஈரோடு பஸ் நிலையம், ரெயில் நிலையங்களில் சிறப்பு தடுப்பூசி முகாம் அமைக்கப்பட்டு இருந்தன. இதில் பொதுமக்கள் பலர் ஆர்வமுடன் கலந்து கொண்டு தடுப்பூசி செலுத்தி கொண்டனர். ஈரோடு காந்திஜி ரோட்டில் உள்ள நகர்ப்புற அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நடைபெற்ற கொரோனா தடுப்பூசி முகாமினை, மாவட்ட கலெக்டர் கிருஷ்ணனுண்ணி பார்வையிட்டார். அப்போது அவருடன் மாநகராட்சி நகர்நல அலுவலர் பிரகாஷ் உள்பட பலர் உடன் இருந்தனர்.


Next Story