முத்தரையர் முன்னேற்ற சங்க நிர்வாகி கார் மீது நாட்டு வெடிகுண்டு வீச்சு


முத்தரையர் முன்னேற்ற சங்க நிர்வாகி கார் மீது நாட்டு வெடிகுண்டு வீச்சு
x

கொள்ளிடம் நம்பர் 1 டோல்கேட் அருகே முத்தரையர் முன்னேற்ற சங்க நிர்வாகியின் கார் மீது நாட்டு வெடிகுண்டு வீசப்பட்டது. இது தொடர்பாக 5 பேரை போலீசார் கைது செய்தனர்.

திருச்சி

சமயபுரம், ஜூன்.15-

கொள்ளிடம் நம்பர் 1 டோல்கேட் அருகே முத்தரையர் முன்னேற்ற சங்க நிர்வாகியின் கார் மீது நாட்டு வெடிகுண்டு வீசப்பட்டது. இது தொடர்பாக 5 பேரை போலீசார் கைது செய்தனர்.

இதுபற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

கார் மீது வெடிகுண்டு வீச்சு

திருச்சி புத்தூர் நால்ரோட்டைச் சேர்ந்தவர் ஆறுமுகம். இவரது மகன் திலீப் (வயது 34). இவர் தமிழ்நாடு முத்தரையர் முன்னேற்ற சங்க திருச்சி மாவட்ட இளைஞரணி அமைப்பாளராக உள்ளார். இவருக்கும் வீர முத்தரையர் முன்னேற்ற சங்கத்தை சேர்ந்த சிலருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்ததாக தெரிகிறது.

இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு திலீப் திருச்சியில் இருந்து லால்குடிக்கு காரில் சென்று கொண்டிருந்தார். கொள்ளிடம் நம்பர் 1 டோல்கேட்டை அடுத்த அகிலாண்டபுரம் என்ற இடம் அருகே சென்றபோது அங்கே நின்று கொண்டிருந்த 5 பேர் கொண்ட கும்பல் கார் மீது நாட்டு வெடிகுண்டுகளை வீசினர். இதில் கார் கண்ணாடி உடைந்தது. திலீப் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். இதுபற்றி தகவல் அறிந்த திருச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுஜித்குமார், லால்குடி துணை போலீஸ் சூப்பிரண்டு சீதாராமன், சமயபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பொன்ராஜ் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டனர்.

5 பேர் கைது

இதுகுறித்து திலீப் கொடுத்த புகாரின்பேரில் சமயபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பொன்ராஜ், சப்- இன்ஸ்பெக்டர் வாசுதேவன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர்.

இந்த சம்பவத்தில் ஈடுபட்டதாக அகிலாண்டபுரம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த பெருமாள் மகன் கோபாலகிருஷ்ணன் (28), மாமுண்டி மகன் சுரேஷ் என்ற தாயுமானவன் (21), செந்தில்குமார் (42), ஸ்ரீரங்கம் கீழவாசல் ரெட்டியார் தெருவைச் சேர்ந்த சிதம்பரம் மகன் நந்தகுமார் (25), வினோத் என்ற ஹரிஹரன் (25) ஆகிய 5 பேரை நேற்று கைது செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.


Related Tags :
Next Story