மாட்டுத்தாவணியில் ரூ.27லட்சத்திற்கு காங்கயம் இன பசுமாடுகள், கன்றுகள், காளைகள் விற்பனை


மாட்டுத்தாவணியில் ரூ.27லட்சத்திற்கு காங்கயம் இன பசுமாடுகள், கன்றுகள், காளைகள் விற்பனை
x

பழையகோட்டை மாட்டுத்தாவணியில் ரூ.27லட்சத்திற்கு காங்கயம் இன பசுமாடுகள், கன்றுகள், காளைகள் விற்பனை செய்யப்பட்டது.

திருப்பூர்

முத்தூர்

பழையகோட்டை மாட்டுத்தாவணியில் ரூ.27-லட்சத்திற்கு காங்கயம் இன பசுமாடுகள், கன்றுகள், காளைகள் விற்பனை செய்யப்பட்டது.

பழையகோட்டை மாட்டுத்தாவணி

திருப்பூர் மாவட்டம் நத்தக்காடையூர் அருகே உள்ள பழையகோட்டை மாட்டுத்தாவணியில் உலகிலேயே வீரத்திற்கும், கம்பீரத்திற்கும் உலக புகழ் பெற்ற காங்கயம் இன காளைகள், கன்றுகள், பசுமாடுகள் விற்பனை சந்தை வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்று வருகிறது.

இதன்படி நேற்று நடைபெற்ற சந்தையில் திருப்பூர், ஈரோடு, கரூர், நாமக்கல், கோவை, திருச்சி, திண்டுக்கல் உள்பட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த காங்கயம் இன காளைகள் வளர்ப்போர்கள், நாட்டு மாடுகளை வளர்க்கும் விவசாயிகள், காங்கயம் இன காளை பராமரிப்பு விருத்தியாளர்கள் பலர் திரளாக கலந்து கொண்டனர். மாட்டு சந்தைக்கு விவசாயிகள் விற்பனைக்காக கொண்டு வந்த காங்கயம் இன பெரிய பூச்சி காளைகள், இளம் பூச்சி காளைகள், செவலை பசுமாடுகள், மயிலை பூச்சி காளைகள், மயிலை பசுமாடுகள், மயிலை கிடாரிகள், காராம்பசு கிடாரி கன்றுகள் என ரகம் வாரியாக தரம் பிரிக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டது.

பசுமாடுகள் விற்பனை விறுவிறுப்பு

இந்த சந்தையில் நேற்று காங்கயம் இன பசுமாடுகளை வாங்குவதற்கு விவசாயிகள், வியாபாரிகள் அதிக ஆர்வத்துடன் நேரில் திரண்டு வந்து கலந்துகொண்டனர். தமிழகத்தில் திருப்பூர் உள்பட 10-க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் கடந்த ஒரு மாத காலமாக அவ்வப்போது மழை பெய்தது. இதனால் திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில் கிராமப்பகுதிகளில் காங்கயம் இன பசுமாடுகள் விரும்பி உண்ணும் கொழுக்கட்டை புற்கள் அதிக அளவில் நன்கு வளர்ந்து உள்ளன. இதனால் இப்பகுதி விவசாயிகள் காங்கயம் இன பசுமாடுகள் கன்றுகள் வாங்கி வளர்ப்பதற்கு கடந்த 3 வார காலமாக அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.

இதனால் இந்த சந்தையில் நேற்று விற்பனைக்காக கொண்டு வரப்பட்ட மொத்தம் 106 காங்கயம் இன காளைகள், பசுமாடுகளில் மொத்தம் 68 நாட்டு பசுமாடுகள், காளைகள், கன்றுகள் விறுவிறுப்பாக விற்பனை செய்யப்பட்டது.

பழையகோட்டை மாட்டுத்தாவணியில் ரூ.27-லட்சத்திற்கு காங்கயம் இன பசுமாடுகள், கன்றுகள், காளைகள் விற்பனை செய்யப்பட்டது.

சந்தையில் அதிகபட்சமாக காங்கயம் இன செவலை கிடாரி கன்றுடன் சந்தன நிறம்கொண்ட மயிலை பசுமாடு ரூ.80 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்பட்டது. காங்கயம் இன இளங்கன்றுகள் ஆரம்ப விலையாக ரூ.40 ஆயிரம் முதல் விற்பனை செய்யப்பட்டது. நேற்று மட்டும் ஒரே நாளில் மொத்தம் ரூ.27 லட்சத்துக்கு காங்கயம் இன காளைகள், கன்றுகள், மாடுகள் விற்பனை செய்யப்பட்டது.

திருப்பூர் உள்பட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த காங்கயம் இன காளைகள், மாடுகள் வளர்க்கும் விவசாயிகள், வியாபாரிகள் பலர் கலந்து கொண்டனர்.


Related Tags :
Next Story