போக்குவரத்துக்கு இடையூறாக சாலையில் சுற்றித்திரியும் மாடுகள்


போக்குவரத்துக்கு இடையூறாக சாலையில் சுற்றித்திரியும் மாடுகள்
x
தினத்தந்தி 3 Nov 2022 6:45 PM GMT (Updated: 3 Nov 2022 6:42 PM GMT)

திருத்துறைப்பூண்டியில் போக்குவரத்துக்கு இடையூறாக சாலையில் மாடுகள் சுற்றித்திரிகின்றன. இதை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கவனித்து பிடித்து அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் எதிர்பார்த்துள்ளனர்.

திருவாரூர்

திருத்துறைப்பூண்டி:

திருத்துறைப்பூண்டியில் போக்குவரத்துக்கு இடையூறாக சாலையில் மாடுகள் சுற்றித்திரிகின்றன. இதை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கவனித்து பிடித்து அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் எதிர்பார்த்துள்ளனர்.

திருத்துறைப்பூண்டி

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி நகராட்சியில் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். ஊராட்சி ஒன்றிய பகுதியில் 32 ஊராட்சிகளும், 92 குக்கிராமங்களும் உள்ளன. இந்த நிலையில் கிராமப்புறங்களில் உள்ள மக்கள் திருத்துறைப்பூண்டி நகரத்திற்கு பொருட்கள் வாங்குவதற்கும், வேலைக்கு செல்வதற்கும் மற்றும் ஆஸ்பத்திரிக்கும் வந்து செல்கின்றனர்.மேலும் பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் ஆயிரக்கணக்கானோர் வந்து செல்கின்றனர். இருசக்கர வாகனங்கள், நான்கு சக்கர வாகனங்கள் உள்ளிட்டவைகளில் அதிக அளவில் பொதுமக்கள் வந்து செல்கின்றனர்.

சாலையில் சுற்றித்திரியும் மாடுகள்

இந்த நிலையில் திருத்துறைப்பூண்டி நகர பகுதியில் மாடுகள் அதிக அளவில் சுற்றித்திரிகின்றன. இந்த மாடுகள் சாலையின் நடுவே நின்று கொண்டு போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்துகின்றன.

இரவு நேரங்களில் மாடுகள் சாலையில் படுத்து கொள்கின்றன. அப்போது மோட்டார் சைக்கிள்களில் வருபவர்கள் மாடுகளின் மீது மோதி காயம் அடைகின்றனர். இந்த மாடுகளால் வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்து வருகின்றனர்.

பிடித்து வனப்பகுதியில் விட வேண்டும்

சாலையில் செல்லும் மாணவ-மாணவிகளை மாடுகள் விரட்டி சென்று முட்டுகின்றன.நகராட்சி நிர்வாகம் பலமுறை எச்சரிக்கை விடுத்தும் மாடு உரிமையாளர்கள் அதை கட்டிப்போட்டு வளர்ப்பதில்லை. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் போக்குவரத்துக்கு இடையூறாக சாலையில் சுற்றித்திரியும் மாடுகளைப் பிடித்து கோடியக்கரை வனப்பகுதியில் விட வேண்டும். மாட்டின் உரிமையாளர்களுக்கு பெரிய அளவில் அபராதம் விதிக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story