கடலூர் மத்திய சிறையில் சவுக்கு சங்கர் திடீர் உண்ணாவிரத போராட்டம்


கடலூர் மத்திய சிறையில்   சவுக்கு சங்கர் திடீர் உண்ணாவிரத போராட்டம்
x
தினத்தந்தி 30 Sep 2022 6:45 PM GMT (Updated: 30 Sep 2022 6:46 PM GMT)

கடலூர் மத்திய சிறையில் சவுக்கு சங்கர் திடீர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டாா்.

கடலூர்

கடலூர்முதுநகர்,

தமிழக அரசின் லஞ்ச ஒழிப்பு ஊழல் தடுப்பு துறையில் அலுவலராக பணியாற்றி வந்த சவுக்கு சங்கர், அரசு ஆவணங்களை கசியவிட்ட புகாரில் சிக்கி பணி நீக்கம் செய்யப்பட்டார். இந்த நிலையில் நீதித்துறை குறித்து 'யூடியூப்' சமூக வலைத்தளத்தில் சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்த அவர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது. இதில் அவருக்கு 6 மாதம் சிறை தண்டனை விதிக்கப்பட்டு கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

சிறையில் அடைக்கப்பட்டிருந்த சவுக்கு சங்கரை பார்ப்பதற்காக ஏராளமான பார்வையாளர்கள் கடலூர் மத்திய சிறைக்கு வந்ததாக தெரிகிறது. இதனால் அவரை பார்வையாளர்கள் பார்ப்பதற்கு ஒருமாதம் தடை விதித்து கடலூர் மத்திய சிறை அலுவலகம் உத்தரவிட்டிருந்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், தன்னை பார்வையாளர்கள் பார்ப்பதற்கு மீண்டும் அனுமதி வழங்கக் கோரியும் சவுக்கு சங்கர் நேற்று காலை முதல் சிறை வளாகத்தில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார். முன்னதாக இது தொடர்பாக அவர் மனு ஒன்றை சிறை கண்காணிப்பாளரிடம் கொடுத்ததாகவும், அதை அவர் வாங்க மறுத்து விட்டதாகவும் கூறப்படுகிறது. சிறை வளாகத்தில் சவுக்கு சங்கர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story