'தினத்தந்தி' புகார் பெட்டி


தினத்தந்தி புகார் பெட்டி
x
தினத்தந்தி 10 Sep 2023 7:45 PM GMT (Updated: 10 Sep 2023 7:45 PM GMT)

‘தினத்தந்தி' புகார் பெட்டிக்கு 89396 58888 என்ற ‘வாட்ஸ்-அப்' எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

திண்டுக்கல்

சாலையில் தேங்கும் கழிவுநீர்

பழனி அருகே உள்ள அ.கலையம்புத்தூரில் இருந்து ராஜாபுரம் செல்லும் சாலையில் கழிவுநீர் தேங்கி நிற்கிறது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனர். மேலும் நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே சாலையில் தேங்கும் கழிவுநீரை அகற்ற வேண்டும்.

-விக்னேஷ், ராஜாபுரம்.

சேதமடைந்த சாலை

தாடிக்கொம்பு அருகே ராஜகோபாலபுரத்தில் உள்ள தெருக்களில் சாலை சேதமடைந்து காணப்படுகிறது. இந்த நிலையில் கடந்த சில நாட்களாக பெய்த மழையால் சாலையில் உள்ள பள்ளங்களில் மழைநீர் தேங்கியதால் சேறும், சகதியுமாக மாறிவிட்டது. இதனால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே அந்த சாலைகளை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -பொதுமக்கள், ராஜகோபாலபுரம்.

பயணிகள் நிழற்குடை

திண்டுக்கல் அருகே உள்ள மாரம்பாடி ஊராட்சி கஸ்தூரிநகரில் உள்ள பஸ் நிறுத்தத்தில் பயணிகள் நிழற்குடை இல்லை. இதனால் பஸ்சுக்காக காத்திருக்கும் பயணிகள் வெயில், மழை காலங்களில் பெரிதும் அவதிப்படுகின்றனர். எனவே கஸ்தூரிநகரில் பயணிகள் நிழற்குடை அமைத்து தர வேண்டும்.

-பொதுமக்கள், கஸ்தூரி நகர்.

சாலையின் நடுவே பள்ளம்

திண்டுக்கல் கிழக்கு தாலுகா அலுவலகத்துக்கு செல்லும் சாலையின் நடுவே பெரிய பள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால் தாலுகா அலுவலகத்துக்கு வரும் பொதுமக்கள் சிரமப்படுகின்றனர். இருசக்கர வாகனங்களில் வருவோர் தடுமாறி விழுந்து விபத்தை சந்திக்கின்றனர். அந்த சாலையை சீரமைக்க வேண்டும்.

-ஜெயக்குமார், திண்டுக்கல்.

தெருநாய்கள் தொல்லை

பெரியகுளம் பழைய பஸ்நிலையம் அருகே ஏராளமான தெருநாய்கள் கூட்டம், கூட்டமாக சுற்றி திரிகின்றன. தனியாக செல்பவர்களை துரத்தி, துரத்தி கடிக்கின்றன. இதனால் பஸ் நிலையத்துக்கு வரும் பயணிகள் அச்சத்துடன் கடந்து செல்லும் நிலை உள்ளது. எனவே நகராட்சி அதிகாரிகள் தெருநாய்களின் தொல்லையை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-பாபு, பெரியகுளம்.

சேதமடைந்த மேல்நிலை குடிநீர் தொட்டி

ரெட்டியார்சத்திரம் அருகே உள்ள கம்பளிநாயக்கன்பட்டியில் மேல்நிலை குடிநீர் தொட்டி சேதமடைந்த நிலையில் உள்ளது. மேலும் அதனை சுற்றி புதர் மண்டி காணப்படுகிறது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் புதர்களை அகற்றி சேதமடைந்த மேல்நிலை குடிநீர் தொட்டியை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். -ரெங்கசாமி, கம்பளிநாயக்கன்பட்டி.

புதர்மண்டிய கால்வாய்

கம்பம் ஊத்துக்காடு பகுதியில் உள்ள கோசேந்திர கால்வாய் புதர் மண்டி காணப்படுகிறது. மழை காலங்களில் கம்பம் மேற்கு மலையடிவாரத்தில் இருந்து வரும் மழைநீர் கால்வாயில் செல்வதில் சிக்கல் ஏற்படுகிறது. இதனால் அந்த பகுதியில் உள்ள விவசாயிகளும் பாதிக்கப்படுகின்றனர். எனவே கால்வாயை தூர்வாரி சீரமைக்க வேண்டும்.

-பார்த்திபன், கம்பம்.

குண்டும் குழியுமான சாலை

கடமலைக்குண்டு அருகே உள்ள ஓட்டணை கிராமத்தில் இருந்து நரியூத்து செல்லும் சாலை சேதமடைந்து குண்டும், குழியுமாக காட்சி அளிக்கிறது. இதனால் வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். மேலும் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே அங்கு புதிதாக தார்சாலை அமைத்து தர வேண்டும். -பொதுமக்கள், நரியூத்து.

பாலம் அமைக்க வேண்டும்

வருசநாடு அருகே வண்டியூர் பகுதி வழியாக வைகை ஆறு பாய்கிறது. இந்த வண்டியூர் மக்கள் வெளியூர் செல்வதற்காக ஆற்றை கடந்து செல்ல வேண்டியிருக்கிறது. மழை காலங்களில் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டால் பள்ளி மாணவர்கள், பொதுமக்கள் ஆற்றை கடக்க முடியாமல் சிரமப்படுகின்றனர். எனவே வண்டியூர் பகுதியில் வைகை ஆற்றின் குறுக்கே பாலம் அமைக்க வேண்டும். -சுமன், வருசநாடு.

தெருவிளக்குகள் எரியவில்லை

திண்டுக்கல்லை அடுத்த சீலப்பாடி ஊராட்சி 2-வது வார்டில் ஒருசில தெருவிளக்குகள் சரியாக எரிவதில்லை. இதனால் இரவு நேரங்களில் பெண்கள், குழந்தைகள் வெளியே செல்ல அச்சப்படுகின்றனர். எனவே தெரு விளக்குகளை சரி செய்ய வேண்டும்.

-வீரமணி, சீலப்பாடி.

உங்கள் புகார்களை இணையதளம் மூலமாகவும் https://pukaarpetti.dailythanthi.com என்ற முகவரியில் பதிவு செய்யலாம்.


Related Tags :
Next Story