'தினத்தந்தி' புகார் பெட்டி
![தினத்தந்தி புகார் பெட்டி தினத்தந்தி புகார் பெட்டி](https://media.dailythanthi.com/h-upload/2023/02/19/1150289-dindugalcompliantbox.webp)
‘தினத்தந்தி' புகார் பெட்டிக்கு 89396 58888 என்ற ‘வாட்ஸ்-அப்' எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
குழாய் உடைந்து வீணாகும் தண்ணீர்
வடமதுரையை அடுத்த வேல்வார்கோட்டை 3-வது வார்டில் பதிக்கப்பட்ட குழாயில் அடிக்கடி உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வீணாக வெளியேறுகிறது. இதனால் பொதுமக்கள் போதுமான அளவு தண்ணீர் கிடைக்காமல் அவதிப்படுகின்றனர். எனவே குழாய் உடைப்பு பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு ஏற்படுத்த வேண்டும்.
-, வேல்வார்கோட்டை.
சுகாதார வளாகம் தேவை
தொப்பம்பட்டியை அடுத்த மரிச்சிலம்பு பகுதியில் சுகாதார வளாகம் அமைக்கப்படவில்லை. இதனால் பெண்கள் திறந்தவெளியை கழிப்பிடமாக பயன்படுத்தும் அவல நிலை உள்ளது. மேலும் சுகாதாரக்கேடும் ஏற்படுகிறது. எனவே சுகாதார வளாகம் அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-செல்வம், மரிச்சிலம்பு.
குண்டும், குழியுமான சாலை
நிலக்கோட்டை தாலுகா சிலுக்குவார்பட்டியில் இருந்து மதுரை செல்லும் பிரதான சாலை சேதமடைந்து குண்டும், குழியுமாக மாறியுள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் மிகவும் அவதிப்படுகின்றனர். மேலும் அந்த சாலையில் ஆம்புலன்ஸ் வாகனங்கள் வேகமாக செல்ல முடியாத நிலை உள்ளது. எனவே சாலையை சீரமைக்க வேண்டும்.
-கிராம மக்கள், சிலுக்குவார்பட்டி.
வேகத்தடைகள் அகற்றப்படுமா?
பழனியை அடுத்த மானூர் அண்ணாநகர் பகுதியில் தேவை இல்லாத இடங்களில் வேகத்தடைகள் அமைக்கப்பட்டுள்ளன. இதனால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் மிகவும் அவதிப்படுகின்றனர். எனவே ஊரின் நுழைவு பகுதி மற்றும் முக்கிய இடங்கள் தவிர மற்ற இடங்களில் உள்ள வேகத்தடைகளை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
-புகழீழன், மானூர்.
மரக்கிளைகளை வெட்ட வேண்டும்
நிலக்கோட்டையில் இருந்து மதுரை செல்லும் சாலையில் கரியாம்பட்டி பிரிவு பகுதியில் சாலையோர மரத்தின் அருகில் மின்கம்பம் உள்ளது. மரத்தின் கிளைகள் மின்கம்பத்தை உரசியபடி உள்ளன. இதனால் மின்விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே மின்கம்பத்தை ஒட்டியுள்ள மரக்கிளைகளை வெட்டி அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-விஜயகுமார், கரியாம்பட்டி.
சேறும், சகதியுமான சாலை
சின்னமனூரை அடுத்த பூமலைக்குண்டு கிருஷ்ணன்கோவில் தெருவில் உள்ள மண்பாதையில் கழிவுநீர் தேங்குவதால் சேறும், சகதியுமாக காட்சியளிக்கிறது. இதனால் வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் அவதிப்படுகின்றனர். எனவே அப்பகுதியில் தார்சாலை அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-லட்சுமணன், பூமலைக்குண்டு.
பயன்பாடு இல்லாத சுகாதார வளாகம்
சின்னமனூரை அடுத்த சின்னஓவுலாபுரத்தில் உள்ள பெண்களுக்கான சுகாதார வளாகம் பயன்பாடு இல்லாமல் பூட்டியே கிடக்கிறது. மேலும் சுகாதார வளாகத்தை சுற்றிலும் குப்பைகளும் கொட்டப்பட்டுள்ளன. இதனால் அப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுவதுடன் சுகாதாரக்கேடும் ஏற்பட்டுள்ளது. எனவே சுகாதார வளாகத்தை பயன்பாட்டுக்கு கொண்டுவருவதுடன், குப்பைகளையும் அகற்ற வேண்டும்.
-பொதுமக்கள், சின்னஓவுலாபுரம்.
சாலையில் தேங்கும் கழிவுநீர்
ஆண்டிப்பட்டி தாலுகா டி.ராஜகோபாலன்பட்டி 1-வது வார்டு சத்யாநகரில் உள்ள சாக்கடை கால்வாய் தூர்வாரப்படாததால் கழிவுநீர் வெளியேறி சாலையில் தேங்கி நிற்கிறது. இதனால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதுடன் வாகன ஓட்டிகளும் அவதிப்படுகின்றனர். எனவே சாக்கடை கால்வாயை தூர்வார வேண்டும்.
-சென்றாய பெருமாள், டி.ராஜகோபாலன்பட்டி.
பூட்டிக்கிடக்கும் கழிப்பறை
ஆண்டிப்பட்டி தாலுகா ராஜகல்பட்டி அருகே டி.அழகாபுரியில் கட்டப்பட்ட கழிப்பறை பயன்பாடு இன்றி பூட்டியே கிடக்கிறது. இதனால் பொதுமக்கள் திறந்தவெளியை கழிப்பறையாக பயன்படுத்தும் நிலை உள்ளது. எனவே கழிப்பறையை பயன்பாட்டுக்கு கொண்டுவர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ராஜேஷ்குமார், அழகாபுரி.
வெயிலில் காய்ந்து வீணாகும் மரத்துண்டுகள்
கம்பத்தை அடுத்த உத்தமபுரம் பகுதியில் அனுமதியின்றி வெட்டப்பட்ட மரத்துண்டுகளை அதிகாரிகள் பறிமுதல் செய்து கிராம நிர்வாக அலுவலக வளாகத்தில் அடுக்கி வைத்துள்ளனர். இந்த மரத்துண்டுகள் வெயிலில் காய்ந்து வீணாகி வருகிறது. மேலும் மரத்துண்டுகளுக்கு இடையே பாம்பு உள்ளிட்ட விஷ ஜந்துக்கள் பதுங்கும் அபாயம் உள்ளது. எனவே அவற்றை ஏலம் மூலம் விற்பனை செய்தால் அரசுக்கு வருமானம் கிடைக்கும். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதை கவனிப்பார்களா?
-நவநீதன், கம்பம்.
----------------
உங்கள் புகார்களை இணையதளம் மூலமாகவும் https://pukaarpetti.dailythanthi.com என்ற முகவரியில் பதிவு செய்யலாம்.
-----------------