முன்னால் சென்ற லாரி மீது மோட்டார் சைக்கிள் மோதி கேரள கல்லூரி மாணவர் பலி-நண்பர் படுகாயம்


முன்னால் சென்ற லாரி மீது மோட்டார் சைக்கிள் மோதி கேரள கல்லூரி மாணவர் பலி-நண்பர் படுகாயம்
x
தினத்தந்தி 25 Jan 2023 6:45 PM GMT (Updated: 25 Jan 2023 6:46 PM GMT)
தர்மபுரி

காரிமங்கலம்:

காரிமங்கலம் அருகே முன்னால் சென்ற லாரி மீது மோட்டார் சைக்கிள் மோதியதில் கேரள மாநில கல்லூரி மாணவர் பரிதாபமாக இறந்தார். அவருடைய நண்பர் படுகாயம் அடைந்தார்.

கேரள மாணவர்கள்

கேரள மாநிலம் கோட்டயம் நீண்டூர் பகுதியை சேர்ந்தவர் சதீஷ். இவருடைய மகன் பிரணவ் (வயது 21). பாலக்காடு பணம்குட்டி பகுதியை சேர்ந்தவர் எல்டோஸ் (20). நண்பர்களான இவர்கள் 2 பேரும் பெங்களூருவில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் மருந்தியல் 2-ம் ஆண்டு படித்து வந்தனர்.

இந்தநிலையில் நேற்று முன்தினம் அவர்கள் 2 பேரும் பெங்களூருவில் இருந்து மோட்டார் சைக்கிளில் கேரளாவுக்கு சென்று கொண்டிருந்தனர். மோட்டார் சைக்கிளை எல்டோஸ் ஓட்டினார். பிரணவ் பின்னால் அமர்ந்திருந்தார்.

விபத்தில் பலி

தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம் அருகே மணிக்கட்டியூர் பகுதியில் இரவில் தேசிய நெடுஞ்சாலையில் சென்றபோது, முன்னால் சென்ற லாரி மீது மோட்டார் சைக்கிள் திடீரென மோதியது. இந்த விபத்தில் கீழே விழுந்ததில் பிரணவ், எல்டோஸ் ஆகியோர் படுகாயம் அடைந்தனர்.

அவர்களை அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு சிகிச்சைக்காக தர்மபுரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு டாக்டர்கள் பரிசோதித்தபோது பிரணவ் ஏற்கனவே இறந்தது தெரியவந்தது. எல்டோசுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

போலீசார் விசாரணை

இது குறித்து தகவல் அறிந்த காரிமங்கலம் போலீசார் பிரணவ் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் விபத்து தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story